1999 ல் நாலாயிரம் ரூபாய் முதலீடு 2019 ல் எழுநூறு பேருக்கு முதலாளி
1999 ல் நாலாயிரம் ரூபாய் முதலீடு
2019 ல் எழுநூறு பேருக்கு முதலாளி
**************
20 வருடங்களுக்கு முன்பு தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் ஆசிப் அஹ்மத் துவங்கிய தள்ளுவண்டி வியாபாரம் இறைவன் அருளால் இன்று தமிழகத்தின் மிகப்பெரிய ஆசிப் பிரியாணி எனும் சாம்ராஜ்யமாக வளர்ச்சி அடைந்துள்ளது..
தனது 12வது வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏழாம் வகுப்பு படிக்கும் போது அதிகாலையில் பேப்பர் போடும் தொழில் செய்த ஆசிப் அஹ்மத் , விடுமுறை நாட்களில் வீடுவீடாக சென்று பழைய பேப்பர் சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்தவர்..
தனது 14வது வயதில் ஒன்பதாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு குரோம் பேட்டையில் உள்ள ஒரு லெதர் கம்பெனியில் நிட்டிங் பணி ஒப்பந்தம் அடிப்படையில் நடத்தி வந்தார்..
சில மாதங்களில் அந்த பணியும் கிடைக்காத சூழலில் திருமண வைபவங்களுக்கு சமையல் செய்யும் பிரியாணி மாஸ்டருக்கு உதவியாக செல்லும் வேலை கிடைத்தது..
ஒரு திருமணம் ஆர்டருக்கு 500 ரூபாய் சம்பளம் கிடைத்த நிலையில் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது..
தனது 21வது வயதில் வெறும் நான்காயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு தள்ளுவண்டி, பெட்ரோமாக்ஸ் லைட், சமையல் பாத்திரங்கள் வாங்கிய ஆசிப் அகமது தி.நகர் பகுதியில் முதலில் பிரியாணி வியாபாரம் துவங்கினார்.
ஆரம்பத்தில் மூன்று கிலோ சிக்கன் பிரியாணி வீட்டில் சமைத்து தள்ளுவண்டி உதவியால் தினசரி பத்து கிமீ அலைந்து இரவு வரை விற்பனை செய்து திரும்பும் போது செலவு போக 250 ரூபாய் மிச்சம் வரும்..
ஆனாலும் மனம் தளராத ஆசிப் அஹ்மத் படிப்படியாக வியாபாரத்தை அதிகரிக்க நிரந்தர வாடிக்கையாளர்களும் கிடைத்தனர்..
தள்ளூவண்டி வியாபாரம் செய்ய உள்ளூர் ரவுடிகள் தொந்தரவு அதிகரிக்க பஜாஜ் M80 ஸ்கூட்டர் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு வீடுகளுக்கே டெலிவரி செய்யவும் துவங்கிய ஆசிப் அஹ்மத் தனது முதல் கடையை செயின்ட் தாமஸ் மவுண்ட் பட் ரோட்டில் ஆரம்பித்தார்..
சுமார் 15 பேர் மட்டுமே அமர்ந்து உண்ணும் வசதியுள்ள சிறிய பிரியாணி கடை அடுத்தடுத்து கிளைகள் பரப்பி கடந்த 20 வருடங்களில் சென்னையில் மட்டும் 15 க்கு மேற்பட்ட கிளைகள் உட்பட தமிழகம் முழுவதும் 25 கிளைகளுடன் சுமார் எழுநூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பிரியாணி சாம்ராஜ்யமாக வளர்ச்சி கண்டுள்ளது ஆசிப் பிரியாணி நிறுவனம்..
சென்னை ஆலந்தூர் கிளை சுமார் 15000 சதுர அடி பரப்பளவில் விசாலமான பார்க்கிங் வசதியுடன் கூடிய உணவகத்தில் ஆரம்பத்தில் தனது வியாபாரத்துக்கு உதவிய தள்ளுவண்டியை மறக்காமல் நினைவு கூருகிறார் ஆசிப் அஹ்மத்..
சமீபத்தில் முதல் அயல்நாட்டு கிளையை இலங்கையில் துவங்கியுள்ளார்.