முதுகுளத்தூர் மைய நூலகத்துக்குசொந்தக் கட்டடம் கட்டக் கோரிக்கை
முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதுகுளத்தூர் வர்த்த சங்கம் சார்பில் சமூக ஆர்வலர்கள் கோ. உமையலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957 ஆம் ஆண்டில் மைய நூலகம் துவக்கப்பட்டது. இந்த நூலகம் இன்று வரை கமுதி சாலையிலுள்ள தனியார் கட்டடத்தில் மாத வாடகை ரூ. 4000 கொடுத்து இயங்கி வருகிறது.
அரசு இப்போது இளைஞர்களுக்கு போட்டி தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு அளிக்கிறது. இதற்குப் படிக்கத் தேவையான நூல்கள் மைய நூலகத்தில் உள்ளன. ஆனால் மைய நூலகம் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருப்பதால் வாசகர்கள் நூலகம் செல்லத் தயங்குகின்றனர்.
எனவே மாணவ, மாணவிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அரசு இடத்தில் கட்டடம்கட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.