அரசு திருமண நிதியுதவி திட்டங்களில் நிதியுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு
சென்னை: அரசு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ், நிதியுதவிப் பெற, தற்போதுள்ள, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
ஏழை பெண்கள், கலப்பு திருமணம் செய்பவர்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு உதவும் வகையில், ஐந்து விதமான, திருமண நிதியுதவி திட்டங்கள், அரசால் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில், விதவை மறுமண நிதியுதவி திட்டம், கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஆதரவற்ற பெண்கள், திருமண நிதியுதவி திட்டம் ஆகியவற்றின் கீழ், பயனாளிகளுக்கு, வருமான உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. மற்ற திட்டங்களுக்கு, தற்போது நிர்ணயிக்கப்பட்டு இருக்கும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு, குறைவாக உள்ளதால், அதிக அளவு, ஏழை, எளிய மக்களால் பயன்பெற இயலவில்லை. இதை கருத்தில் கொண்டு, அரசு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ், நிதி உதவி பெற, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.