போலி !
போலி !
( மலேசியக் கவிஞர் சீனி நெய்னா முஹம்மது )
பிடிக்காத கணவனுடன் வாழ்க்கை போலி !
பெருமைக்கு நிதியளிக்கும் வள்ளல் போலி !
படிக்காமல் பெறுகின்ற பட்டம் போலி !
பதவிக்குப் படை நடத்தும் தலைவன் போலி !
தடுக்காத காரணத்தால் தமிழில் வந்து,
தப்படித்துத் திரியும் புதுக் கவிதை போலி !
இடிக்காமல் அறிஞரெலாம் இருப்பதாலே,
ஈக்கள் போல் வெளியாகும் நூல்கள் போலி !
புகழ்வேட்டை யாடுகின்ற செல்வர் கூட்டம்
பொதுநலனில் காட்டுகின்ற ஆர்வம் போலி !
நிகழ்கால நிலைமாற்றி எதிர்காலத்தை
நிச்சயமாய் உயர்த்துவதாய் புளுகித் தள்ளி
சுகமாகத் தான் வாழச் சமுதாயத்தைச்
சுரண்டுகின்ற கயவர்களின் கலைகள் போலி !
தொகையாக்கி குலுக்கலிலே பணம் குவிக்கச்
சுருக்கு வழி எத்தர் செய்யும் வித்தை போலி !
( தேன்கூடு நூலிலிருந்து )
நன்றி : நர்கிஸ் – செப்டம்பர் 2014
Tags: போலி