பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து ;
தைத்திங்கள் பிறக்கிறது .
தைப்பொங்கல் வருகிறது .
தை ,தை எனக்குதித்து
‘தை’ மகளை வரவேற்போம் .
உலகோர் பசி தீர்க்க
உழைக்கின்ற உழவர்க்கு
உற்சாகம் தருகின்ற
உன்னத விழாவன்றோ !
ஏரோட்டி ,சால் அமைத்து
நீர் பாய்ச்சி ,நாற்றுநட்டு ,
களையெடுத்து , எரு இட்டு,
தலையெடுத்த பயிரை
அறுவடை செய்தடுக்கி ,
அறுவடைமுடித்த வயலில்
புத்தடுப்பு தானமைத்து
புதுப்பானைப் பொங்கலிட்டு
புத்தாடை தானுடுத்து
பொங்கிவரும் பால்கண்டு
பொங்கலோ பொங்கலெனக்
குலவையிட்டுக் கொண்டாடி ,
ஆதவணைக்கும்பிட்டு
ஆவினத்தைச் சீராட்டி ,
நன்றி நவிலும் நாளே
பொங்கல் எனும் நன்னாள் – இது .
உழவர்களின் திருநாள் .
ஊரார் பசிதீர்க்கும்
உழவர்தம் துயர்தீர்க்க
உரிய விலைகொடுத்து
உயர்ந்திடுவோம் அவர்நிலையை .
இடைத்தரகர் எனும்
ஈனப்பிறவிகளின்
கொட்டத்தைத் தானடக்கி
கொள்ளையைத் தடுத்திடுவோம்.
நீர்நிலைகள் புனரமைத்து
நீர்வளம் பெருக்கி பயிர்
வீணாகும் நிலையை
விரைந்து சரிசெய்வோம் .
இயற்கைப் பேரிடரால்
இன்னல் விளைந்தக்கால்
நம் கை கொடுத்து அவர்க்கு
நம்பிக்கை அளித்திடுவோம் .
வில்லேருழவர்க்கும் ,
சொல்லேருழவர்க்கும் ,
எல்லோர் வயிற்றுக்கும்
நல்லேர்தான் ஆதாரம் .
உழவுக்கும் , உழவர்க்கும்
உழைப்புக்கும் வந்தனம் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்