யூனியன் கார்பைடும் ‘மேக் இன் இந்தியா’வும்: மோடியின் பார்வைக்கு ஒரு கடிதம்
யூனியன் கார்பைடு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யவே வந்தது. ஒரிஜினல் ‘மேக் இன் இந்தியா’ என்று கூறலாம்.
டிசம்பர் 2, 1984 அன்று மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த விஷவாயு கசிவு சம்பவத்தை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ஒரு கடிதம் எழுதியுள்ளது.
இந்த 5 அமைப்புகளுமே போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்படவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்றுத் தருவதற்காக போராடி வருகின்றன.
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பழிவாங்கிய, பல நூறு சந்ததிகளை இன்றளவும் நோயாளிகளாக உலாவ விட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தான போபால் சம்பவத்தின் 30-வது நினைவு தினத்தையொட்டி இக்கடிதத்தை அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளனர்.
கடிதத்தின் சாராம்சம்:
“போபால் சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், பேரழிவை ஏற்படுத்திய விபத்துக்கு காரணமான டோ கெமிக்கல்ஸ் நிறுவனம் போபால் மாவட்ட நீதிமன்றம் முன்னர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில்தான், அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தி வருகிறது.
இந்தியாவை உற்பத்தியாளர்களின் கூடாரமாக்க வேண்டும் என்ற முனைப்பில் அரசு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அழைக்கும் அதே நேரத்தில் அவர்கள் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வலியுறுத்தப்பட வேண்டும்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்ய அறைகூவல் விடுப்பதில் உற்சாகமாஅ செயப்லடும் தங்கள் அரசு அவர்களை இந்திய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படவும் அறிவுறுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.
யூனியன் கார்பைடு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யவே வந்தது. ஒரிஜினல் ‘மேக் இன் இந்தியா’ என்று கூறலாம்.
எனவே எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய உர மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அனந்த குமாருடன் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என தாங்கள் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட்சி சொல்லும் அருங்காட்சியகம்:
போபால் சம்பவத்தின் 30-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி “Remember Bhopal” என்ற அருங்காட்சியம் ஒன்று பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு ஒழிப்பேழைகளாக வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக 50 ஒழிப்பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்தனையும் வேதனையின், பேரழிவின் சாட்சியங்கள். அதுதவிர, சில நினைவுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அவையும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்தவையேயாகும்.
இந்த அருங்காட்சியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமா லட்சுமி ஒரு பத்திரிகையாளராவார். அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளிலும் நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அருங்காட்சியத்தை தொடங்க காரணம் என்றும் இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தானமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல எனவும் அவர் கூறினார்.
தமிழில்: பாரதி ஆனந்த்