எழுந்து வாருங்கள் SPB
எழுந்து வாருங்கள் SPB
—சந்திரசேகர்—–
பாடும் நிலாவே!
பாலு எனும் பேரில்
நாடு போற்றும்
நல்லவரே!
இசையை என்னதென்று
அசைபோடத் தெரியாத
திசையெல்லாம் வந்துந்தும்
விசையாளும் வித்தகரே!
மூச்சுக்காற்றில்
பலநூறு பாவங்கள்
பாய்ச்சலெடுத்து வரும்
வீச்சுகுரலால் வியக்கவைத்த
பாட்டுத் தலைமகனே!
கொரோனா எனும்
கொடியவன் மட்டும் நின்
பாட்டில் மயங்காமல் தலை
மாட்டில் நின்று தாளம் தப்பிவிட
தீட்டும் திட்டத்தால் திகைத்துப்
போனாயோ!
அழிவில்லா உன்பாட்டின்
ஆன்ம சுகம் அறியா
வீண்பழிக்கு வித்தாகும்
கொரோனா கோரமுகம் உனை
கும்பிட்டு ஓடிவிடும்! உன்
குரலின் நவரசங்கள் இந்த
குவலயம் விட்டு
குடிபெயர விடுவோமா!
குணக்குன்றே கவலையற்க!
மனச்சோர்வில் தத்தளித்த
பலகோடி ரசிகர்களை, நின்
பாட்டுத் திறத்தால்
உயிர்ப்பித்த உத்தமரே! உமை உயிர்துறக்க விடுவோமா?
எம் வாழ்வில் எஞ்சியதை
எமனுக்கு வேண்டுமானால்
எடுத்துக் கொள்ளட்டும்
என்றே தவம் செய்யும்
எமையொத்த ரசிகர் மனம்
ஈசனவன் காதில் இன்றே எதிரொலிக்க காண்பீரே!
எப்போதும் நீர் காட்டும்
அன்புமுகம் காட்ட
எழுந்து வாருங்கள்! எம்
ஏக்கப் பெருமூச்சை
ஆக்கப் படுத்துதற்கு
இன்றே வாருங்கள்!
பரிசுகளும், பட்டையமும்
இருந்தென்ன!
போயென்ன!
வரிசை கட்டிவந்த
பாட்டுக் குரல்
போனதெங்கே!
அருகில் இருப்பதுபோல்
அன்றாடம் தோன்றி
ஆழ்மனதை வருடிவிடும்
பாடலிசை தந்தவரே!
ஆன்மசுகம் இதுவென்று
அனுதினமும் காட்டிவிட்டு
அபலைகளாய் எமையாக்கி
அயல்தூரம் போனதெங்கே!
மாய்ந்த கதை தெரிந்தாலும்
மனமொக்க மறுக்கிறது! உமை
மாய்த்த எமனவனை, மனம்
மன்னிக்க மறுக்கிறது!