பெருந்தொற்று காலத்தை கேடயமாக்கி…
பெருந்தொற்று காலத்தை கேடயமாக்கி…
பேரா. ராமச்சந்திர குஹா
இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்துக்கே 2020ஆம் ஆண்டு பெரும் துயரங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. அதிகாரத்துவத்துக்கு பேர் போன மோடி, அமித் ஷா கூட்டணி இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தை உருக்குலைத்து, தங்கள் ஆளுமையை, அழுத்தத்தை அரசு மற்றும் சிவில் சமூகத்தை இந்த பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி நிலைகுலைய வைத்துள்ளனர் . அவர்களின் இலக்குகளை முழுமையாக அடைந்திட, இந்திய நாடாளுமன்றம், கூட்டாட்சி, ஊடகம், சிவில் சமூக அமைப்புகளின் மீது பன்முக தாக்குதலை தொடுத்துள்ளனர்.
மோடியின் கடந்த காலம்…
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, சட்டமன்ற ஜனநாயக நெறிமுறைகளை கிஞ்சிற்றும் பின்பற்றாதவர். சொல்லப்போனால் அதன் மீது துளியும் நம்பிக்கை கொள்ளாதவர். அந்த நெறிமுறைகளை எதிர்த்தே பணியாற்றியவர். குஜராத் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் மோடி முதலமைச்சராக இருந்த ஆண்டுகளில்தான் அம்மாநில சட்டமன்றம் குறைவாக கூட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு அறிக்கை சொல்லுகிறது.
அவரது ஆட்சிக் காலத்தில் பல மாதங்களுக்கு சட்டமன்றமே கூடாது. அப்படியே தப்பி தவறி கூடினாலும், அவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் எனும் பேரில் வீணாக நேரத்தை கழித்து அவையை இரங்கல் கூட்டமாக மாற்றுவார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு வாய்ப்பே இருக்காது. அப்படியே பேசினாலும் அதை மோடி கண்டு கொள்ளவே மாட்டார். இது ஏதோ எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நிலையல்ல. தன் சொந்தக் கட்சி உறுப்பினர் கூட எதையும் பேச முடியாது, அனுமதியும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தன் அமைச்சரவை கூட்டத்தைக் கூட நடத்தியதில்லை. இந்த அதிகாரத் திமிரோடுதான் மோடி தில்லிக்கு வந்தார். ஏற்கெனவே செய்ததை பிரதமராக ஆன பின்பும் செய்கிறார்.
மோடியும்- நாடாளுமன்றமும்
இந்திய நாடாளுமன்ற அவை என்பது மோடியை பொறுத்தவரை, வெறும் உரைகள் நிகழ்த்தும் மண்டபம் அவ்வளவே..மாறாக நாடு, அதன் குடிமக்கள் குறித்த பிரச்சனைகள் பற்றி விவாதிக்கும் இடமல்ல. தற்போதுள்ள நாடாளுமன்ற சபாநாயகரும், மாநிலங்களவையின் தலைவரும் தங்கள் அரசியல் தலைவரின் சிந்தனையை அடியொற்றி இந்த இரு அவையின் மாண்புகளை குலைத்து “சார்புத் தன்மையோடு” நடந்து கொள்கின்றனர். இதற்கு சான்றுகள் ஏராளம் உள்ளன. சமீபத்தில் “ வேளாண் திருத்தச் சட்டங்கள்” எப்படி இரு அவைகளிலும், “ நிறைவேற்றப்பட்டது” என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதுவும் குறிப்பாக மாநிலங்களையில், அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நேரடி வாக்கெடுப்புக்கு அனுமதிக்காமல், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த மசோதாக்களை சட்டமாக்கியதை பார்த்தோம். நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி இம்மாதிரியான ஜனநாயக விதி மீறல்நல்லதல்ல என்றும் நாடாளுமன்ற முறைமையே எதிர்க் கட்சிகளை விவாதிக்க விடுவதிலும், அம்மாதிரியான விவாதங்களின் வழியாக இறுதியாக அரசுகள் முடிவெடுப்பதும் என்பதுதான். எதிர்க்கட்சிகளை பேச விடாமல், விவாதங்களே நடத்தாமல் போனால் ஜனநாயகத்தின் மிக முக்கியமான நிறுவனமான நாடாளுமன்றம் நீண்ட நாட்கள் நீடிக்காது என அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
எல்லாவற்றையும் கண்மூடித் தனமாக
மோடியின் “ பக்தர்கள்” எப்போதும் போல இந்த ஜனநாயக விதிமீறல்களையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், வேளாண் திருத்தச் சட்டங்களை வரலாற்றுச் சிறப்பு மிக்கவை என்று போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நேசிக்கும், அதற்கு மதிப்பளிக்கும் சிலர் இந்த சட்டங்களை ஆதரித்தாலும், அது சட்டமாக்கப்படும்போது அவையின் மாண்புகள் எப்படி மீறப்பட்டன. அதன் அதிகாரம் எவ்வாறு சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வேதனையுற்று தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டுள்ளனர்.
இதோ ஒரு சான்று..மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் பின் வருமாறு எழுதுகிறார்: “ கடுமையான பொருளாதார இழப்பையும், தலைநகர் தில்லியைச் சுற்றி இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருப்பதையும் நாடாளுமன்றத்தில் இந்த வேளாண் சட்டங்களை முறையாக விவாதித்திருந்தால் தடுத்திருக்க முடியும். விவசாயிகளின் இந்தப் போராட்டம் நாடாளுமன்ற ஜனநாயகம் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது”.
மத்திய அமைச்சர்களோ இந்தப் போராட்டத்திற்கு நகர்ப்புற நக்சல்களே, காலிஸ்தான் தீவிரவாதிகளே, எதிர்க்கட்சிகளே காரணமென கூறலாம். ஆனால் தத்தார் சொல்கிறார் “எதிர்வினைகளை பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஒரே குறிக்கோளோடு பெரும் எதிர்ப்பையும் மீறி, இந்தச் சட்டங்களை இரு அவையிலும் நிறைவேற்றிய விதமே இந்த போராட்டங்களுக்கு அடிப்படை. பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்பை இந்த போராட்டங்கள் மேலும் அதிகமாக்கும்.”
இது மத்திய ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்டதே. ஒரு பக்கம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை மொத்தமாக கொரோனா தொற்று என ரத்து செய்து விட்டு, அமித் ஷா மேற்கு வங்கத்திலும், அசாமிலும் பெரும் பொதுக் கூட்டங்களை நடத்துகிறார். குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும் போது கூட்டுறவு கூட்டாட்சியின் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என சொன்ன மோடி, இப்போது பிரதமரான பிறகு மாநிலங்களின் உரிமைகளை காட்டுமிராண்டித்தனமாக, காலில் போட்டு மிதித்து, அனைத்தையும் மறுக்கிறார். இதற்கும் இப்போதைய வேளாண் சட்டங்களின் திருத்தங்களே சான்று.
நமது அரசியலமைப்பு சட்டம் “விவசாயம்” மற்றும் “சந்தை”யை மாநில அரசு பட்டியலில் வைத்துள்ளது. மத்தியஅரசு அதை ஊக்குவிக்க, மேலும் சில சலுகைகளை வழங்க, மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒரு போதும் “தானாக” எந்த சட்டத்தையும் இயற்றிட முடியாது என்பதை தெளிவாகச் சொல்கிறார் ஹரிஷ் தாமோதரன். ஆனாலும், ஒருங்கியல் அதிகாரப் பட்டியலில், வேண்டுமென்றே தவறான விளக்கத்தை முன்வைத்து, உணவுக்கான வர்த்தக மற்றும் பொருளாதாரப் பட்டியலில் மாற்றம் செய்து, மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல் இந்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளனர் என வேதனையோடு பதிவிடுகிறார். கூட்டாட்சி தத்துவத்திற்கே இந்த பெருந்தொற்றுக் காலத்தில் ஆகப்பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தேசியப் பேரிடர் நிர்வாகச் சட்டம் இக்காலத்தில் திருத்தப்பட்டு மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கவகை செய்யப்பட்டுள்ளது. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசியல் குழப்பங்களை உருவாக்குவது, பெருந்தொகைகளை கொடுத்து சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, என அநாகரீக அரசியலில் பாஜக ஈடுபடுகின்றது.
மக்கள் நலனை பற்றி ஒரு சிறு கவலை கூட இல்லாமல், பதவி மற்றும் அதிகார வெறிக்காகவே மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தான் நான்கு மணி நேர அவகாசத்தில் கொடூரமான ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்தது.
தமிழாக்கம்: என்.சிவகுரு
நன்றி : தி ஸ்குரோல் இணைய இதழ்