இறைமறையின் இரத்தச் சுவடே
இறைமறையின் இரத்தச் சுவடே
—————————— ————————
வானகமே வையகமே
வளம் நிறைந்த கானகமே
வாழும் பல உயிரினமே
வள்ளல் உதுமான் வரலாற்று
வாழ்வியலை சொல்கையிலே
கல்மனமும் உருகிடுமே
கசிந்துருகி வருந்திடுமே
மாநபியின் மனம் குளிர
மதினத்து நபவியினை
மாற்றி அழகாய் புனரமைத்து
மங்காபுகழ் நிலைத்து நிற்க
மனமுவந்து உழைத்தவரே
உஹது மலை உச்சியிலே
உத்தமர் நால்வர் நின்றிருக்க
உற்சாகத்தில் அது அசைந்தாட
உஹதே அசையாதே என சொல்லி
இரு ஷுஹதாக்கள்
இரு ஸாலீஹீன்கள்
இருக்கிறார்கள் என
இறுதி நபியின் முன்னறிவிப்பால்
இனம்காட்டப் பட்டவரே
பாலைவன அரபுலகில்
பஞ்சம் தலை விரித்தாடிட
ஊர் எல்லையில் ஒட்டகையில்
உதுமான் வணிகப் பொருள்
வந்து இறங்க அதை முழுதும்
வறியவர் எளியவர் என
வாழ்விழந்த அனைவர்க்கும்
வள்ளல் உதுமான் உளம்
உவந்தளித்து மகிழ்ந்ததுவே
இரவின் அகால வேளையிலே இறைமறை ஓதிக் கொண்டிருந்த இறைநேசர் உதுமானின் எதிரிகள்
இன்னுயிரைப் பறித்தனரே
இறைமறையில் சிந்திய இரத்தம்
இறுதிமூச்சு பறித்த கொடுமையை
இதயம் கனக்க கலங்கச் சொல்லி
இன்றும் நிலைத்திருக்கின்றதே
கவின் முகில் மு முகமது யூசுப் உடன்குடி
Tags: இரத்தச் சுவடே இறைமறை