நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை
முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைய நூலகம் தற்போது வரை தனியார் கட்டடத்தில் மாத வாடகையில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்துக்கு வாசகர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அங்கு செல்ல தயங்குகின்றனர்.
மேலும் நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான அனைத்துப் புத்தகங்கள் இருந்தாலும் வாசகர்கள் குறைவாகவே வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே வாசகர்களின் நலன் கருதி தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை, பேருந்து நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூலக அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.