வெள்ளையாடை ………….
( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )
வெள்ளையாடை மேனியிலே சுமந்து சென்றீரே !
வேதனையை மனதினிலே சகித்து நின்றீரே !
முல்லை, மல்லி மலர்களாகத் திரும்பி வந்தீரே !
மன்னவனின் அருள்நிறைந்து தினமும் வாழ்வீரே !
ஷைத்தானைக் கல்லெறிந்து துரத்தி வந்தீரே !
ஷரீஅத்தின் கடமையினை நிறைத்து விட்டீரே !
வைத்திருந்த ஈமானை ஜொலிக்க வைத்தீரே !
வாழ்வெல்லாம் ஷைத்தானைத் விரட்டி வாழ்வீரே !
ஜம்ஜம்மின் அருள்நீரை அருந்தி வந்தீரே !
சகலயின மக்களோடு பொருந்தி நின்றீரே !
எம்மனிதர் என்றபோதும் “நமது” என்றீரே !
எந்நாளும் ஒன்றுபட்டு இணைந்து வாழ்வீரே !
அரபாவில் ஒன்றுகூடி மகிழ்ந்து கொண்டீரே !
அழுகையுடன் இறைவனையே புகழ்ந்து நின்றீரே !
உருகியதோர் மனதுடனே அருளைப் பெற்றீரே !
உலக வாழ்வில் பாவங்களைக் கழுவி வாழ்வீரே !
குர்பானி “அறுத்து தியாகம் செய்து வந்தீரே !
குற்றங்குறை யாவையுமே அழித்து வந்தீரே !
அற்பமான வாழ்வையங்கு புரிந்து கொண்டீரே !
அழியாத சொர்க்கவாழ்வில் புகுந்து விட்டீரே !
ஹஜ்பயணம் சுற்றுப்பயணம் போல இல்லையே !
கடமைகளும் கண்ணியமும் நிறைந்த வல்லவரே !
நிச்சயமாய் நினைவனைத்தும் மாற்றும் பயணமே !
நினைக்க நினைக்க வாழ்வு முழுதும் இனிக்கும் பயணமே !