முதுகுளத்தூர் பிச்சைப் புலவர்

முதுகுளத்தூர் பிச்சைப் புலவர்

சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிறந்த பிச்சைப் புலவரின் காலம் கி.பி.18 அல்லது கி.பி.19 ஆம் ஆண்டாக இருக்கக் கூடும்.
சேதுபதி மன்னனுடைய அவைக்களத்தில் இவருக்குத் தனியோர் இடமுண்டு. பாடல்களைப் பரிசோதகர் எனும் நிலையில் இவர் காணப்பட்டார். கவிப்புலமையும், சமயோகிதப் புத்தியும் மிக்க இவர் பாடல்களை ஆராய்வதில் வல்லவர்.
சேதுபதி மன்னர் இவரிடம் உமக்கு என்ன வேண்டும் எனக் கேட்டதற்கு, எனக்குப் பொன்னோ, பொருளோ, நிலமோ எதுவும் வேண்டாம். என்னால் இயற்றப்பட்ட கவி ஒன்றை மட்டும் பொதுஇடத்தில் அனைவருக்கும் தெரியுமளவில் வைக்க வேண்டுமென்று பணித்துள்ளார். அக்கவியாவது,
“பிச்சன் கவிக்குப் பிழை சொன்னவர்களை
அச்சம் இல்லாமல் அடிப்பேன்
என் கவி மதத்தால்’”
என்பதே.
மேற்சுட்டிய அடிகள் எழுந்தமைக்கானக் காரணத்தை அறிய முற்படுகையில் ‘இவர் வாழ்ந்த காலத்தில் இவருக்கும், இவரது சமுதாயத்தினருக்கும் சமூகத்தில் மரியாதையின்மையினால் பெரிதும் புறந்தள்ளப்பட்டுள்ளனர். அவற்றைப் போக்கத்தான் இவ்வாறு எழுதும் சூழல் ஏற்பட்டது என்பதைக் கள ஆய்வின் வாயிலாக அறிய முடிந்தது.
மிராசுதாரரின் நெருக்கடியால் பிச்சைப் புலவர் இந்து மதத்திலிருந்து இசுலாமிய மதம் மாறியதாகவும் குறிப்பிடப்படுகிறது என வரலாற்று ஆய்வாளர் ஜாகீர் உசேன் குறிப்பிடுகிறார். இதனை,
“மானாமதுரையான் கோத்தரத்தான் அவன்
ராஜன் மின்னாப்பிள்ளை சுல்த்தான்
தானாவலந்தேடும் மாதவத்தான் பிச்சன்
நேகவியல் எடுத்து உரைத்தான்
பிச்சன் கவிக்கு பிழை சொல்லுவாராகில்
அச்சமில்லாமல் கவிமரத்து
ஆணி கொண்டு அடிப்பேன்”’
எனும் அடிகள் மூலம் அறியலாம்.
இயற்றிய நூல்கள்
பிச்சைப் புலவர் இரண்டு நூல்கள் இயற்றியதாக அறிய முடிகிறது.
1. பெருநாழி வில்லியணைத் தேவர் பள்ளு
2. குழந்தை முருகர் பதிகம்
பிச்சைப் புலவர் பொன், மண், பொருள், புகழுக்கோ ஆசை கொண்டிருப்பின் பிறந்த ஊரான முதுகுளத்தூரில் பல நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான சூழல் உண்டாகியிருக்கும். இருப்பினும் எதையும் எதிர்பாராது மானத்தையும், கெளரவத்தையும் நாடினதால் உலக பொருள் மீது அவாக் கொள்ள வில்லை என்பதை அறிய முடிகிறது.
பிச்சைப் புலவர் சுயமரியாதை கொள்கை உடையவர். தாம் வசிக்கும் ஊரில் அவருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது இவரது வாரிசுகளில் ஒருவர் அம்மநாதன். தற்போது நாகப்பட்டினத்திலும், சிங்கப்பூரிலும் வசிப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.

முதுகுளத்தூர் நகர் மருத்துவர் குல சங்கத்தில் காணலாகும் கல்வெட்டு

முனைவர் சே.முனியசாமி
ஆய்வாளர்& உதவிப்பேராசிரியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.


