முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், சாம்பக்குளத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், சாம்பக்குளம் ஆகிய இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் சார்பில் மாவட்டத்தில் 75 அரசு நெல் நேரடி கொள்முதல் மையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக மேற்கண்ட 3 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: கடுமையாக உழைத்து உற்பத்தி செய்த தானியங்களை வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு கொடுப்பதால் விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து இடங்களிலும் விவசாயிகளுக்கு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளார். இம்மையங்களில் நெல் வகைகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்படும். வேளாண்மையில் ராமநாதபுரம் முதன்மை மாவட்டமாக வருவதற்கு ஒவ்வொரு விவசாயிகளும் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
திறப்பு விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், நிலவள வங்கித் தலைவர் ஆர்.தர்மர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஐ.சுதந்திரக்காந்தி இருளாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.