முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் தடுப்பு
முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் நடைபெற இருந்ததை வியாழக்கிழமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் முருகையா, காளீஸ்வரி தம்பதியரின் 16 வயது மகளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவருக்கும் இம்மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.
இத்தகவல் சைல்டுலைன் அமைப்புக்கு தெரியவந்ததையடுத்து அவ்வமைப்பின் தலைவர் நாகநாதன், மாவட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மீனாட்சி, ஊர்நல அலுவலர் சண்முகசுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குழந்தை திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், பெண்ணின் பெற்றோர்களிடம் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சட்ட விதிகள் குறித்தும் எடுத்துக் கூறினர். மேலும், திருமணத்தை நடத்தமாட்டோம் என பெற்றோரிடம் எழுதி வாங்கினர்.