முதுகுளத்தூரில் சதுரங்க போட்டி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் வட்டார அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடைபெற்றது.
முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல் நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான 11 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு சதுரங்க போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் முகமது சுலைமான் தலைமை வகித்தார். தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள துவக்க பள்ளி, உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் 11 வயதுக்கான போட்டியில் திருவரங்கம் துவக்க பள்ளி மாணவி வைஷ்ணவி முதல் பரிசு பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் விக்கிரமபாண்டியபுரம் பள்ளி மாணவர் ராஜபாண்டி முதல் பரிசு பெற்றார். 14 வயது பிரிவில் சாயல்குடி பள்ளி மாணவர் பிரகலநாதன், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி மாணவி அப்சரா ஜியான ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
17 வயது பிரிவில் முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல் நிலைப்பள்ளி மாணவர் காதர் முகைதீன், பெண்கள் பிரிவில் மலட்டாறு விவிஎஸ்எம் மாணவி கல்கி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 19 வயது பிரிவில் சிக்கல் மேல் நிலைப்பள்ளி மாணவர் முகமது ஜமாருதீன், பெண்கள் பிரிவில் பள்ளி வாசல் மேல் நிலைப்பள்ளி மாணவி மது ஆகியோர் முதல் பரிசை பெற்றனர்.
சதுரங்க போட்டியை, உடற்கல்வி ஆசிரியர் ஜான்சன், கலைச்செல்வம், கமால் பாட்ஷா, அன்சாரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ராமநாதபுரம் உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.