மக்கள் தொடர்பு திட்ட முகாம்
முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலி உள்வட்டம் இளங்காக்கூர் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் புதன்கிழமை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் லிங்கம்மாள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் பட்டா மாறுதல், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதல், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 37 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டதில், 11 மனுக்களுக்கு பட்டா மாறுதல் செய்து தீர்வு வழங்கப்பட்டன.
முகாமில் முதுகுளத்தூர் தாசில்தார் ஆர்.ரவீந்திரநாதன், தேரிருவேலி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி யுவராஜ், சமூக நல பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பவானி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் முருகராஜ், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டனர்.
கடலாடி தாலுகா சிக்கல் குரூப் ஆண்டிச்சிகுளம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமுக்கு பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் வசந்தி தலைமை வகித்தார். கடலாடி தாசில்தார் ரவிராஜ், கடலாடி ஒன்றியக் குழுத் தலைவர் வீ.மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 63 மனுக்கள் கிராம மக்களிடத்தில் பெறப்பட்டு அதில் 10 மனுக்களுக்கு பட்டா மாறுதல் செய்து தீர்வு வழங்கப்பட்டன. முகாமில் சிக்கல் ஊராட்சி மன்றத்தலைவர் சிவன், மண்டல துணை வட்டாட்சியர் (பொறுப்பு) ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சீனிமுகம்மது, கிராம நிர்வாக அலுவலர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.