பரமக்குடி- முதுகுளத்தூர் சாலையில் விதிமீறிய வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பரமக்குடி- முதுகுளத்தூர் சாலையில் விதிமீறிய வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையிலான சாலையில் விதி மீறி அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் விபரீதங்கள் நிகழ்கின்றன.பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையில் உள்ள 25 கி.மீட்டருக்குள் தொழில்நுட்பக்கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகள், மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. மேலும், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள், தனியார் வாகனங்கள் என தினமும் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன.
பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரை சாலையில் சுமார் 20 இடங்களில் வேகத் தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளைக் கடக்க வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு ஊரின் பேருந்து நிறுத்தத்திலும் அப்பகுதி மக்கள் தங்கள் விருப்பம்போல, அனுமதியின்றியும், விதி மீறியும் வேகத்தடைகளை அமைத்துக்கொள்கின்றனர். மேலும், வேகத் தடை இருக்கிறது என்பதை எச்சரிக்கும் விதமாக ஒளிரும் பெயின்ட்களோ அல்லது தகவல் பலகைகளோ அமைப்பதில்லை. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.
விதி மீறி அமைக்கப்படும் வேகத்தடைகளால் தினமும் விபத்துகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பரமக்குடியிலிருந்து டூவீலரில் செல்பவர்கள் அரை மணிநேரத்தில் முதுகுளத்தூர் சென்றுவிடலாம். ஆனால், வேகத் தடைகளால் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. புதிதாக டூவீலரில் முதுகுளத்தூர் செல்பவர்கள் வேகத் தடைகள் தெரியாமல் தூக்கி எறியப்பட்டு உயிர் பலியாகும் சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகத் தடைகள் தேவையான இடங்களில், விதிமுறைகளோடு அமைப்பதோடு வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ளும் விதமாக அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.