தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் அறிவிப்பு
முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ஊராட்சியில் காவிரி தண்ணீர் இரண்டு வருடமாக வராததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா காத்தாகுளம் ஊராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
காக்கூர் பம்பிங்கிலிருந்து, ராமலிங்கபுரம், சடையனேரி வழியாக காத்தாகுளம், கீழமானாங்கரை ஆகிய ஊர்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை மர்ம நபர்கள் உடைத்து கரிமூட்டம் போடுவதற்கும், தரிசு நிலத்திற்கும் பாய்ச்சுவதாகவும்,இதனால் காத்தாகுளம் ஊராட்சிக்கு தண்ணீர் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.இதுகுறித்து அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும், தங்கள் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடியினை ஏற்றியுள்ளனர்.
இது குறித்து தாசில்தாரிடம் கேட்ட போது, கோரிக்கையை உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறுவதாக தெரிவித்தார்