இளைஞர் கொலை: குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்
முதுகுளத்தூர் அருகே இளைஞரை அடித்துக் கொன்ற குற்றவாளியை கைது செய்யக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.தூரி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பசாமி. இவரை ஆக. 27ஆம் தேதி கிடாத்திருக்கையைச்சேர்ந்த அர்ச்சுணன் மகன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தாக்கியதில் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் இளஞ்செம்பூர் காவல்நிலைய போலீஸார் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யப்படாததால் எம்.தூரி கிராம பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கமுதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல்அறிந்து வந்த முதுகுளத்தூர் டி.எஸ்.பி கணபதி, தூவல் ஆய்வாளர் (பொறுப்பு)கஜேந்திரன்,சார்பு-ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர், ஒரு வாரத்தில் குற்றவாளிகளை கைது செய்வதாக தெரிவித்தனர். அதன்பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.