இடிந்து வரும் கலையரங்கம்
முதுகுளத்தூர்,: மேலச்சாக்குளம் கிராமத்தில் கட்டி முடித்து இன்னும் திறப்பு விழா காணாத நிலையில், கலையரங்கம் இடியும் நிலையில் உள்ளது. முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2015-16ம் ஆண்டில் முதுகுளத்தூர் அதிமுக எம்எல்ஏ முருகன் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் இன்னும் திறப்பு விழா காணாமல் உள்ளது. தற்போது தரைத்தளம் போதி தரம் இல்லாமல் உடைந்து வருகிறது. இதில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியோ, நாடகம் போன்றவை நடத்த முடியாமல் உள்ளது. இதனை மறுபடியும் சரி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மயில்வாகணன், கோபிநாதன் கூறுகையில், எங்கள் கிராமத்தில் பல்வேறு அரசு பணிகள் நடைபெறுகின்றது. பெரும்பாலான திட்ட பணிகள் முறையாக நடைபெறுவது கிடையாது. தற்போது 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கமும் தரைத்தளம் உள்ளிட்ட பணிகள் முறையாக செய்யாமல் இடிந்து பெயர்ந்து விட ஆரமித்து விட்டது. இதனால் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் கிராமத்தினர் தற்காலிக மேடை உருவாக்கி பயன்படுத்தி வருகிறோம். இதனால் இடிந்து வரும் கட்டிடத்தினை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.