அப்துல் கலாம் நினைவாக முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்
அப்துல் கலாம் நினைவாக, முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், அவார்டு தொண்டு நிறுவனமும் இணைந்து, தன்னார்வ ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.
முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமை, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எம். நடராஜன் தொடக்கிவைத்துப் பேசுகையில், பொதுமக்களும், இளைஞர்களும், கல்லூரி மாணவ, மாணவியரும் ரத்த தானம் வழங்குவதில் ஆர்வம் காட்டவேண்டும். இது, ஏழை நோயாளிகளுக்கு மிகவும் பயன்படும் வகையில் அமையவேண்டும் என்றார். முகாமில், அவார்டு தொண்டு நிறுவன இயக்குநர் வீ. சின்னமருது வரவேற்றார். கல்லூரி பொறுப்பு முதல்வர் கே. செல்லத்துரை தலைமை உரையாற்றினார். என்.சி.சி. திட்ட அலுவலர் எஸ். துரைப்பாண்டியன், ரத்த தான ஒருங்கிணைப்பாளர் எஸ். அய்யப்பன், மாவட்ட வேளாண்மை சமூகவியலர் கே. மயில்வாகனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், பசும்பொன் தேவர் நினைவுக் கல்லூரி மற்றும் முதுகுளத்தூர் அரசு கல்லூரி மாணவ, மாணவியர் 70 பேர் கலந்துகொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை, தொண்டு நிறுவனத் தலைவர் சி. ரெக்ஸிலின்,ஆர். ஜெயபிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், அவார்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. காந்தி நன்றி கூறினார்.