ஒற்றைத்தலைவலி – காரணங்கள்… தீர்வுகள்!

Vinkmag ad

ஒற்றைத்தலைவலி – காரணங்கள்… தீர்வுகள்!

தாங்கவே முடியாதது எனச் சில வலிகள் உண்டு. அந்தப் பட்டியலில் முதல் வலி… தலைவலி. அதிலும், ஒற்றைத்தலைவலி வந்துவிட்டால்… அதோ கதி. தலையில் ஒரு பக்கமாகத் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்கும்; ஒரு வேலையும் செய்ய முடியாது. கையும் ஓடாது, காலும் ஓடாது.

ஏன் வருகிறது ஒற்றைத்தலைவலி?

அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத்தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும்.

உடல் வெப்பத்தைச் சமநிலையில்வைக்க, வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்தால் போதும். சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும்.
உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்றை, தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவருக்கு இந்தப் பிரச்னை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத்தலைவலி வரும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருப்பதும்கூட தலைவலிக்குக் காரணமாகிவிடும்.

உடலின் வேறு பிரச்னைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும், ஒற்றைத்தலைவலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம், ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் ஒற்றைத்தலைவலி ஏற்படும்.

பாதிப்பது அதிகம் பெண்களே!

ஆண்களைக்காட்டிலும், பெண்களே ஒற்றைத்தலைவலியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, கர்ப்பப்பை பிரச்னை, நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை காரணமாக இருக்கின்றன. தவிர, பூப்பெய்தும் காலம், மாதவிலக்கு வரும் காலக்கட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரங்களிலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆண்களை பொறுத்தவரை
பீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்துவதால் உடலில் பித்தம் உண்டாகும், உடலின் ஆற்றல் குறையும். இதனால், வயிற்றுப்புண் உண்டாகி, வெப்பம் அதிகரிக்கும். இதுவும் ஒற்றைத்தலைவலியில் முடியும்.

எப்படிக் குணப்படுத்துவது?

அலுப்பு தரக்கூடிய ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருத்தல், மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தல், வயல்வெளி, பூங்கா, இயற்கைக் காட்சிகளை ரசித்தல் எனப் பசுமையான இடங்களுக்குச் செல்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, வலி உண்டாகாமல் தவிர்க்கலாம். தவிர, உடலில் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒற்றைத்தலைவலி வராமல் தடுக்க…

சுக்கு, மிளகு, திப்பிலிப் பொடியை மூன்று விரல்களால் எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின், மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனை வெல்லம், சுக்குப் பொடியை நீர்விட்டு காய்ச்சிக் குடித்து வரலாம். இது, பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகளையும் சரிப்படுத்தும்.

இரவு படுக்கச் செல்லும் முன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா சூரணம்) பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால், ரத்தம் சுத்தமாகி, ரத்தஓட்டம் சீராகும். இதனால், ஒற்றைத்தலைவலி மட்டும் அல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.

20 மி.லி., தயிரில், அரை லிட்டர் நீர் சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், முடிந்தால் சிறிதளவு நெல்லிக்காய் சேர்த்துக் கரைத்து, மோராகப் பருகலாம். இதனால், செரிமானம் சீராகும், பித்தம் குறையும் கோடை காலத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

ஒற்றைத் தலைவலி… சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! .

* மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்குப் பசியின்மை இருக்கும். அவர்களில் பலர் பெரும்பாலான நாள்கள், ஒன்று அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவர்.

* சரியான நேரத்துக்குச் சாப்பிடும் பழக்கம் இருக்காது. பசி எடுக்கும் போதெல்லாம் டீ, காபியை மட்டுமே குடிப்பார்கள், இதை கோடைக்காலத்தில் முற்றிலும் தவிர்ப்பது அவசியம். அதற்குப் பதிலாக இளநீர், நுங்கு, நீர்மோர், பானகம் போன்றவற்றை சாப்பிடலாம்.

* ஒருநாளில் மூன்று வேளை உணவு என்பதை, ஆறு வேளை என மாற்றி அமைத்துக் கொள்ளலாம். சாப்பாட்டுக்கான நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு, தினமும் அதை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், நட்ஸ் ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.

* போதுமான அளவு தண்ணீர் குடிக்க மாட்டார்கள், ஒரு நாளைக்கு 3.5 லி தண்ணீர் அருந்த வேண்டும் (தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து, ஒருவருக்கொருவர் மாறுபடும்).

* தூக்க நெறிமுறை இருக்காது. தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம்.

* அதிக மனஅழுத்தத்துடன் காணப்படுவார்கள், மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தினமும் யோகா மற்றும் தியானம் செய்யவேண்டும்.

* வெளியிடங்களில் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கும், அதை தவிர்க வேண்டும்.

மைக்ரேன் பிரச்னையை சில உணவுகள் அதிகரிக்கும். அவை
சாக்லேட், வாழைப்பழம், சுத்திகரிக்கப்பட்ட பால் மற்றும் தயிர் சார்ந்த பொருள்கள், வெங்காயம், தக்காளி, `டைராமைன்’ (Tyramine) சத்து அதிகம் உள்ள உணவுப்பொருளான சீஸ் வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், வேர்க்கடலை, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, அதிக கொழுப்புச்சத்துள்ள அசைவ வகைகள், `எம்.எஸ்.ஜி’ எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்’ (Mono Sodium Glutamate) என்ற சுவையூட்டப்பட்டி சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை மைக்ரேன் பிரச்னையை அதிகரிக்கும்.

எந்த உணவு மைக்ரேன் தலைவலியை அதிகரிக்கிறது என்பதை, நோயாளிகள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்றவாறு, உணவுமுறையை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும்.

புதிதாக டயட் முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, அது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி `மைக்ரேன்’ பிரச்னையை ஏற்படுத்தலாம். முறையாக ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று டயட்டைப் பின்பற்றவும். மைக்ரேன் வலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்த்து வந்தால் பிரச்னைகளை எளிதாகத் தடுக்கலாம்.

தலையில் நீர்கோத்தல், மூளையில் கட்டி என ஒற்றைத்தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. எனவே, சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய்ந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

News

Read Previous

உயர் கல்வி வாய்ப்பு !

Read Next

திருக்குறளில் நகைச்சுவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *