மொபைல் இன்ஷூரன்ஸ் பற்றி தெரியுமா??
புதிதாக வாங்கும் செல் போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். ஒரு செல்போனுக்கு அதிக பட்சம் 3வருடங்கள் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும். அதற்கு மேல் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கும் போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும். செல் போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம் தான் பிரீமியம் இருக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சில விஷயங்களை பாலிசிதாரர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாலிசியின் நிபந்தனைகளைத் தெளிவாகப் படித்துப் பார்ப்பது அவசியம்.
ஏனெனில், இந்த இன்ஷூரன்ஸில் நிபந்தனைகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். சில நிறுவனங்களில் செல் போன் தண்ணீரில் விழுந்தால் கிளைம் தரமாட்டோம் என்ற நிபந்தனை இருக்கும். இன்ஷூரன்ஸ் எடுத்த ஒரு வருடத்தில் செல்போன் தொலைந்து போனால் இத்தனை சதவிகிதம் தான் கிளைம் கிடைக்கும் என்றும் நிபந்தனை விதித்திருப்பார்கள். மேலும், செல்போன் தொலைந்து விட்டது அல்லது திருடு போய்விட்டது என்ற காரணங்களுக்காக கிளைம் கேட்டு விண்ணப்பிக்கும் போது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை கட்டாயம்தேவை. சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் செல்போன் காணாமல் போன சம்பவத்தைக் காவல்துறை முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யவில்லை என்றாலும், காவல்துறையின் சமுதாயப் பதிவேட்டு ரசீது இருந்தால் போதும் எனக் கூறுகின்றன. எனவே, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன்பே எதற்கெல்லாம் கிளைம் கிடைக்கும், எதற்குக் கிடைக்காது என்பதை பாலிசியைப் படித்துப் பார்த்து தெரிந்துகொள்வது நல்லது.
பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செல்போன் இன்ஷூரன்ஸ் வழங்குவதையே தவிர்த்து வருகின்றன. ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு ஒரு முறை புதுசெல்போன் வாங்கும் பழக்கத்தைப் பலரும் வைத்துள்ளனர். எனவே, வேண்டு மென்றே போனை தொலைத் திருக்கலாம் என இன்ஷூரன்ஸ் நிறுவனம் சந்தேகப்படுவது தான் இதற்கு காரணம்.
மேலும், செல்போன் தொலைந்து போனால், காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் கடினமான காரியம் . அதேபோல, முதல் வருடத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும் அதில் அதிக பட்சம் மூன்று வருடம் வரை மட்டுமே அந்த இன்ஷூரன்ஸைத் தொடர முடியும்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உங்கள் செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
Tags: இன்ஷூரன்ஸ் மொபைல்