இறுதி ஊர்வலம்
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர், கணக்காய்வாளர், முனைவர் மு. அ. காதர், மறுமையின் சிந்தனையில் எழுதிய கவிதை:
இறுதி ஊர்வலம்
=================
நடமாடும் பிணம்
பதுக்கியது பணம்
பெரும் கையானாலும்
வெறும் கையோடுதானே
இறுதி ஊர்வலம்?
உயிரே!
இதம் தரும் இதயத்தை
இறுக்கிப் பிடி
துன்புறுத்தும் அத்தனையும்
துரத்தி அடி
ஆணவம் எரித்து
ஆவணப் படுத்து
அடக்கத்தை எடுத்து
ஆடையாய் உடுத்து
புதைக்கப்படுவதற்கு முன்பு
விதைக்க வேண்டுமென்று
பதைக்க வேண்டும் மனசு!
குறை கண்ட கண்கள்
நரை கண்ட பொழுது
திரை நீக்கித் தேடும்
இறை நோக்கி ஓடும்!
ஏகனின் பொருத்தம்
தாகமாய் இருந்தால்
சோகமும் போகும்
சொர்க்கமும் ஆகும்
உயிரே!
நன்றி செலுத்துவதில்
நகரட்டும் நாட்கள்
மறுமைக்கு வாசமிட
மலரட்டும் பூக்கள்