ஹஜ் கடமை
ஹஜ் கடமையை நிறைவேற்றிட அருள் புரிந்த அல்லாஹ்விற்கு ஆழிய நன்றிகள்…
யா அல்லாஹ்….
கருணையே கருணை, மாபெரிது உன் கருணை..
ஹஜ்.. எங்களின் வாழ்நாள் உச்ச லட்சியம் –
இது உன்னால் அல்லவா எங்களுக்கு உரித்தானது…
நிய்யத் வைத்தோம், யா அல்லாஹ்,
அதை நிச்சயித்து வைத்தாய், யா அல்லாஹ்….
கனவாக கண்டு வந்தோம், யா அல்லாஹ்,
அதை நனவாக்கித் தந்தாய், யா அல்லாஹ்..
எத்தனை துஆக்கள், எத்தனை ரக்காஅத் தொழுகைகள்..
அழுது, அழுது, உன் அருளை வேண்டினோம் – யா அல்லாஹ்..
நீ பெரிய கிருபையாளன்…
எங்களின் துஆக்களை ஏற்றுக்கொண்டாய்…
நினைத்துப் பார்க்கிறோம், நெக்குருகிப்போகிறோம்…
நிய்யத் செய்தபோது, எங்களின் கையிருப்புக்கள்
காலியாக அல்லவா இருந்தன…
அழுதோம், தொழுதோம், உன் ஆதரவு கேட்டு இறைஞ்சினோம்…
யா அல்லாஹ், கருணை மழையைப் பொழிவாய் எனக்
கதறிக் கதறிக் கேட்டோம்…
ரப்புல் ஆலமீன் நீ…
அடியானை அழ வைத்து அழகு பார்ப்பவன் நீ…
கேட்க வைத்து அள்ளித் தருபவன் நீ…
அழுது, அழுது கேட்ட துஆக்களை
கபூலாக்கித்தந்தாய், யா கஃபூர்.
ரஹ்மத்தை சொரிந்தாய், யா ரஹ்மானே…
வருமா என நினைத்த பற்றுவரவுகளை –
வற்றாமல் வந்து சேர வைத்தாய், யா வதூத்…
கிடைக்குமா என்று எண்ணிய பழைய கணக்குகளை,
பாங்காய் பங்கீடு செய்தாய் – யா ஃபத்தாஹ்…
யா அல்லாஹ்…
கருணையாளன் நீ… அள்ளித்தருபவன் நீ…
எங்களுக்கு அள்ளித்தந்தாய்…
ஹஜ் செய்யும் பாக்கியத்தை அருளச் செய்தாய்…!
உன் பெருங்கருணைக்கு எப்படி நான் நன்றி சொல்வேன்?
காலமெல்லாம் தொழுதாலும், வணங்கினாலும் உன் கருணைக்கு ஈடில்லை ரஹ்மானே.!
நன்றி சொல்வேன்…. வாழும் காலமெல்லாம் சொல்லிக்கொண்டேயிருப்பேன்…
என் பாதைகளை சீர்படுத்திக்கொள்வேன்…
உன் ரசூல் சொல்லித்தந்ததை என் பாதைகளில் பதியன் போட்டுக்கொள்வேன்…
என் வழிச்சுவடுகள் தடம் புரளாமல் பார்த்துக் கொள்வேன்,…
அண்ணலாரின் வாழ்க்கைத் தடத்தில்,
என் இடம் இருக்கப் பார்த்துக்கொள்வேன்…
சோதனைகளிலும், வேதனைகளிலும், நபிவழியே தீர்வாய் எடுத்துக்கொள்வேன்; ஏற்றுக்கொள்வேன்…
மார்க்கம் சொல்லும் மனிதநேயத்தை நயம்பட நான் பேணிக்கொள்வேன்…
என்னுடைய கொடுக்கல் வாங்கல்களில்,
உன் வரைமுறை இருக்கப் பார்த்துக் கொள்வேன்….
வணிகத்தில், வார்த்தைகளில், அண்ணலாரின் பேணுதல்,
என் அழகிய முன் மாதிரியாய் அமைத்துக்கொள்வேன்…
அருளாளனே; ஆண்டவனே! என் வழிகளை சீராக்கித்தா, யா ரஹ்மானே…
நான் கேட்டபடி நல்வாழ்வு வாழ, வழி செய்வாய், யா ரப்பே…
உன்னையன்றி யார் எனக்கு உதவ முடியும்? யா அல்லாஹ்….
இருகரமேந்தி இறைஞ்சுகிறேன், இறைவனே…!
கண்ணீர்மல்க கதறிக் கேட்கிறேன், கருணையாளனே…!
அருள் புரிவாய் யா அல்லாஹ்…!
என் வழி சிறக்க துணை புரிவாய் யா அல்லாஹ்….!
என் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு அருள் புரிவாய் யா அல்லாஹ்….!
———————————————————————————————————————————-
அபு நௌஃபல், எரவாஞ்சேரி.