விவசாயிக்கு விழா
விவசாயிக்கு விழா
விவசாயிக்கு விழா எடுக்க!
பூமித் தாயிடம் விருப்பம் கேட்டேன்
புன்முறுவலோடு தலையாட்டினாள்
வான் மகளிடம் கருத்து கேட்டேன்
வாழ்க! வளர்க! ! என வாழ்த்தினாள்
சமுத்திரத்திடம் சரியா? என்றேன்
மிகச் சரியே என்று மகிழ்ந்தது
தென்றல் காற்றிடம் சேதியை சேர்த்தேன்
தேவையான விழாதான் என்றது
நெருப்பிடம் நெருங்காமல் உரைத்தேன்
நெக்குருகி நெகிழ்ந்து போனது
மழையிடம் மனு ஒன்றை போட்டேன்
மனம் மகிழ மழை பெய்கிறேன் என்று
மகிழ்ச்சியோடு உரைத்தது
விவசாயியிடம் விருப்பமா? என்றேன்
விரக்தியின் விளிம்பில் நிற்கும்
எனக்கெதற்கு விழா என்றான்?
என்னின் கால்களோ சேற்றில் நடனமாடியவை
கைகளோ கலப்பை பிடித்து உரமேறியவை
வயிறோ பசியினால் ஒட்டிக் கொண்டவை
கண்களோ ஏக்கம் நிறைந்தவை
இதயம் மட்டும்தான் ஏனோ துடிக்கின்றது
நான் வாங்கிய கடனை அடைக்க
இவ்வளவு துன்பத்திலும் ஏதோ வாழ்கிறேன்
துளி விஷம் வாங்கக் கூட காசில்லாமல்
விலை நிலங்களை மீட்டெடுங்கள்
விளை நிலங்களாக்கி உழவு செய்ய
நான் நடப்பதோ வீதியின் ஓரத்திலே
விற்று தரும் தரகனோ மகிழுந்திலே
அந்த நாளும் மீண்டும் வந்திட்டால்
அவனியில் நான்தான் சோறு
படைக்கும் கடவுள்
அப்படி ஒரு நாள் வரும் போது
அவசியமாக விழா எடுங்கள்
ஆனந்தமாய் அனைவரையும்
வாழ வைப்பேன்.
செழிக்க விவசாயம்! வளர்க விவசாயி! !
திருமதி கி,ஜீவா அசோகன், திருவண்ணாமலை
tvm.kjeeva@gmail.com, 9444428592