வாழ்க்கை
குடும்பத்தைத் துறந்து ,
தாயகத்தை மறந்து
உறவுகளை விடுத்து
நண்பர்களைப் பிரிந்து
கட்டிய மனைவியைக்
கடமைக்காய் அனைத்துப் பெற்ற
கட்டழகுக் குழந்தைகளையும்
அவர்தம் மழலையையும்
படிப்படியான வளர்ச்சியையும்
அருகிருந்து பார்க்காது
அவர்களுடைய எதிர்காலத்திற்காக
தன்னுடைய நிகழ்காலத்தை இழந்து
கண்காணா தேசங்களில்
பண்பாட்டு மாற்றங்களை சகித்து
பசிக்காக வயிற்றில்
ருசிக்காத உணவைத் திணித்து
தியாகமே வாழ்க்கையாய் நினைத்து
வீடு வாசல் , காடு , கழனி ,
வாகன வசதிகளும்
கணிசமான கையிருப்பும் சேர்ந்தபின்பு
உடலும் மனமும் சோர்ந்த பின்பு
போதும் இவ்வாழ்க்கைஎன
தாயகம் திரும்பியதும்
அனுபவிக்க வயதுமின்றி
அரவணைக்க தெம்புமின்றி
தன உழைப்பை அவர்களெல்லாம்
அனுபவிக்க சாட்சியாகி
அவர்களுக்கும் அந்நியனாய்
தனக்குள்ளும் தனியனாய்
என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்
எத்தனை சுகமிழந்தோம்
இதற்குத்தானே பாடுபட்டோம் என்று
தனக்குத்தானே திருப்தியுற்று
இதற்குத்தானா பாடு பட்டோம் -என்று
தனக்குத் தானே வருத்தமுற்று
கூட்டிக் கழித்துப் பழங்கணக்குப் பார்த்துக்கொண்டு
காலத்தைக் கழித்துக்கொண்டு
காலனை எதிர்நோக்கி வாழ்வது தான்
திரைகடலோடித் திரவியம் சேர்ப்போர் வாழ்க்கை.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
24.09.2015
Tags: வாழ்க்கை