வாசிப்பு
வாசிப்பு
— அதிரை தாஹா
பிறர் நிகழ்வு அனுபவங்கள் வாசித் தாலோ
பிறழாத வாழ்க்கைநெறி கிட்டும் ! நெல்லொ
அறுவடைமுன்கதிர் முற்றிக்கவிழ்ந்து கொள்ளும்
அதுபோல அறிந்தவர்கள் பணிவேகொள்வர்!
அரைகுறைகள் ஆர்ப்பாட்டம் செய்வர் நூலை
அன்றாடம் வாசிக்காக் குறையே என்பேன்!
மறுமுறை நாம் பிறப்போமா?
வாசி யாமல் வாழ்வதுவா?
பிறப்பினிலே பயனே இல்லை¡
கோடையதின் கொடுவெப்பம் குளிர் மரத்தை
மொட்டையாக்கி விடுவதுபோல் வாசிக் காமல்
தாடைதரும் பேச்செடுத்துப் பேசா, கல்விச்
சார்ந்துவந்து கல்லாதார் மொட்டை யானார்!
ஊடகமாம் வஹிகொணர்ந்தே ஷிப்ரீல் நபிக்கு
ஓதுகவே! என்றார்கள் வாசி ! வாசி !
கூடிவர வாசிப்பும் அவசியம்தான்!
கூறினேன் வாசியென மூச்சைத் தானே!
உத்தமர்கள், தூதர்கள், விஞ்ஞானிகள்
உயர்தத்துவத்தின் சீர் மேதை யெல்லாம்
முத்தாக விளைந்த தெல்லாம் வாசிப்பாலே!
முகமூடிக் கிழித்தெறிந்து இருட்டொழித்தே
வித்திடவே வாசிப்பு வைய மெல்லாம்
விளக்காக நாகரீகம் மலர்ந்தே காண்!
அத்திக்கும் ஊத்திக்கும் எத்திக்கும்தான்
அறிவு-ஒளி பரவியதும் வாசிமப் பாலே!
ஆழ்ந்திருந்து வாசித்தால் தியான மாகும்
அதனாலே உடல்நலமே ஆகும்¡ உள்ளம்
ஆழ்கடலாய் ஆகிவரும் அன்பு தத்தை
ஆக்கிவிடும்¡ அறிஞர்தாம் அண்ணா அவர்கள்
மூழ்கினரே நூலகத்தின் கடலுக்குள்ளே
முத்தெடுப்பார் இரவெல்லாம் வாசிப் பாரே !
வீழாமல் நாடிதனைப் புடைக்கச் செய்யும்
விலகிவிடும் பிணிகளெல்லாம் வாசிப்பாலே!