வழிசமைப்போம் வாருங்கள் !
வழிசமைப்போம் வாருங்கள் !
( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )
ஆட்சிதனில் அமர்ந்திருந்தும்
அதியுயர்ந்த பதிவிபெற்றும்
மாட்சியுடை மணிமகுடம்
தான்சூடிக் கொண்டிருந்தும்
நாட்டிலிப்போ பெண்கள்தமை
நலிவடையச் செய்யும்நிலை
நாளுமே பெருகுவதை
நாம்தினமும் பார்க்கின்றோம் !
வீட்டுக்குள் இருந்தவளை
வெளிவரவே செய்திருந்தும்
நாட்டுக்குள் நடமாட
நரகாசுரர் விடவில்லை
கல்விகற்கும் பெண்கள்கூட
கண்கலங்கி நிற்கின்றார்
கயமைநிறை மனமுடையார்
கதிகலங்கச் செய்கின்றார் !
பட்டம்பல பெறுகின்றார்
சட்டம்பல பயிலுகின்றார்
நட்டம்பல வாழ்க்கையிலே
நாளுமவர் காணுகிறார்
கெட்டவரின் கண்பார்வை
பட்டுவிடும் போதெல்லாம்
பட்டுவிடும் பாடதனை
பார்க்கின்றோம் ஏக்கமுடன் !
படிக்கின்ற இடத்திலெல்லாம்
பலதுன்பம் காணுகிறார்
படிப்பிக்கும் ஆசானே
பாதகனாய் மாறுகிறார்
அரவணைக்கும் காவலரோ
அரக்கராய் மாறுகிறார்
அவதியுறும் பெண்கள்தமை
அன்றாடம் காணுகின்றோம் !
வள்ளுவனார் குறள்படித்தும்
மனமாற்றம் வரவுமில்லை
துள்ளுதமிழ் பாரதியின்
சொல்கூட ஏறவில்லை
பலமதங்கள் தத்துவமும்
பயனற்றுப் போயினவோ
பரிதவிக்கும் பெண்கள்நிலை
பரிதாபம் ஆகிறதே !
திருமணத்தின் பெயராலே
தினமும்பெண்கள் வதைபட்டு
திடீர்மரணம் தேடுவதை
தினசரியால் அறிகின்றோம்
தெருவிலவர் நடமாட
தினமுமே அஞ்சுகிறார்
அனுதினமும் அவர்வாழ்வு
அச்சமுடன் விடிகிறதே !
பெண்களெங்கள் கண்களென
பெருமையுடன் பேசிவிட்டு
பெண்களது பெருமைதனை
பிய்த்தெறிந்து வீசுகிறோம்
மங்கலங்கள் தரும்பெண்கள்
வாழ்வினுக்கே விளக்காவார்
வாழ்வாங்கு வாழ்வதற்கு
வழிசமைப்போம் வாருங்கள் !
Tags: வழிசமைப்போம்