வள்ளுவனை உலகினுக்கே தந்து..

Vinkmag ad

வள்ளுவனை உலகினுக்கே தந்து..

======================================ருத்ரா


வான் புகழ் கொண்ட

தமிழ் நாடு

கொல்லும் சாதிவெறிக்குள்ளா

குறுகி விடும்?


காவி உடையுடன்

காசு அகலப்பொட்டும்

இட்டுவைத்து

தமிழின் ஓர் இமயத்தை

மடக்கி விட நினைக்கும்

உங்கள்

மடமையை நினைத்தால்

சிரிப்பு தான் பொங்கும்.

அவன் என்ன‌

கணிப்பொறியா?

மாய பட்டன் தட்டி

தமிழ்த்திரு நாட்டை

நீங்கள்

பறித்துக்கொள்ள?

மழித்தலும் நீட்டலும்

வேண்டாம்

மானுட அறமே

நல் அறமாம்.

பிறப்பில் யாவரும் சமமே.

இரந்தும்

உயிர் வாழ்தல் வேண்டின்

பரத்து கெடுக

உலகு இயற்றியான்

எனும்

இறைவன் அல்லது அரசன்

என்று முழங்கிய வள்ளுவன்

மனிதனை மனிதன் சுரண்டும்

சனாதனத்தை

ஒழித்திடவே

திருக்குறள் என்னும்

சுடர் தந்தான்.

அல்லல் பட்டு ஆற்றாது

அழுத கண்ணீர் அன்றே

செல்வச்செருக்கு தந்த

ஆதிக்கத்தை…

சாதிக்கொடுமைகளை…

தேய்க்கும்படை என்று

“தீ”க் குரல் தந்தான்.

அதனால் தான்

“தீக்குறளை” சென்று ஓதோம்

என்று

வள்ளுவனைக்கண்டு

அஞ்சி ஓடினீர்கள் அன்று!

இன்று

ஓட்டு வங்கியை

கொள்ளை அடிக்க

காவி முக்காடு போட்டு

வள்ளுவம்

என்ற முழுச் சூரியனை

ருத்ராட்சக்கொட்டையில்

மறைக்க வந்தீர்.

தமிழ் என்றாலே

ஒரு செம்புயல் தான்.

உங்கள் குப்பைக்கூளங்கள்

யாவும் இனி

ஓடித்தொலைந்து ஒழிந்திடுமே !

உங்கள்

இருட்டு யுகங்களை

விரட்டியடித்து

தமிழ்ப்பேரொளிக்கடல்

இன்று

பொங்கட்டுமே !

News

Read Previous

எங்கள் கனவு…

Read Next

தோல்வி அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *