மூச்சுக் காற்றில் இனி முகாரி ராகம்
மூச்சுக் காற்றில் இனி முகாரி ராகம்
———————————————-
(25-9-2020 SPB இறப்பின் போது)
வானம்பாடியின் வாய்கள் மூடின
கானக் குயிலின் கானம் ஓய்ந்தன
காற்றும் இசையும் மௌனித்தன
காலன் மட்டும் மகிழ்ந்து போனான்
எத்தனை நாள் காத்திருப்பது
ஏங்கி நான் உனக்காக தவிப்பது
எமலோகம் வந்து விடு பாலா நீ
என் அரசவையில் வந்து பாடு நிலா
எமன் அழைத்தான் என்று
எம் நெஞ்சம் பிய்த்து போனாய்
எமலோகத்தில் என்ன உண்டு
என்று எமை ஏமாற்றிப் போனாய்
மூச்சு விடாமல் பாடினாய் உன்
மூச்சுக்காற்றை பிரபஞ்சத்தில்
முழுவதுமாய் நிரப்பிச் சென்றாய்
முகடுகளில் மோதி இனி அவை
முகாரி ராகம் மட்டும் இசைக்குமோ
இளைய நிலா உன்னில் உறங்க
இசையும் உன்னில் இளைப்பாற
இல்லை இனி நீ என்றானபோது
இதயம் கனத்து வலிக்கிறது
உன் இசை சுமந்த மேகம் அழுகிறது
என் இமை கசிந்ததற்கு ஈடாகவில்லை
உன் தாலாட்டில் தவழ்ந்த தென்றல்
என் கண்ணீரில் கரைந்து போனதோ
திரும்பி வந்து விடுவாய் என்றிருந்தோம்
திரும்ப திரும்ப ஏமாற்றினாய்
திக்கற்ற பறவையாய் உன் பயணம்
திசைமாறிப் போயிற்றே தவிக்கிறோம்
கவின்முகில். மு. முகமது யூசுப் உடன்குடி