முத்தமிழ் அறிஞர் நினைவஞ்சலி
முத்தமிழ் அறிஞர் நினைவஞ்சலி
————-—————
தமிழை இரவலாக
தந்திடு தமிழே….
அஞ்சுகம் முத்துவேலரின்
அருந்தவப் புதல்வரே
தட்சிணாமூர்த்தி என்ற
தமிழ் அகராதியே….
திருக்குவளையில் தோன்றிய
திருக்குறளே…
உயர்நிலைப்பள்ளியில் சேர
உயிரைவிடுவேன் என்று
ஆரூர் தெப்பம் முன்
ஆர்ப்பாட்டம் நடத்தி
பள்ளியில் சேர்ந்த
பட்டினப்பாலையே…….
கண் போன போக்கில் வாழும்
கட்டிளம் வயதில்
கைப்பிரதி ஏடு நடத்திய
கலித்தொகையே…..
பகுத்தறிவு பகலவனின்
குடியரசு பத்திரிக்கையில்
பணியாற்றிய குறுந்தொகையே…..
உயிரினும் மேலான அன்பு
உடன்பிறப்பே என்ற
கர கர ஒற்றை வாக்கியத்தில்
கழகத் தொண்டர்களை
கட்டிப்போட்ட கலிங்கத்துப்பரணியே….
ஒருமுறை உனது
சிலையினை கடப்பாரையால்
சிதைக்கும் காட்சி
பத்திரிக்கையில் படமாக வந்தது
மறுநாள் உனது அறிக்கை…
ஏவி விட்டவர்
எங்கோ இருந்தாலும்
அந்த சின்னத்தம்பி
முதுகில் குத்தவில்லை
நெஞ்சில் அல்லவா குத்துகிறான் என்று
அயலாரையும் பொறுத்தருளும்
ஐம்பெரும் காப்பியமே…
தலைவன் அணிவித்த
தங்க கணையாழி தவிர்த்து
மாற்றுத்தங்கம் அணியாத
மாபெரும் தொண்டனே…
எண்பது ஆண்டு
பொது வாழ்க்கை
யாரும் செய்யாத சாதனை ….
பத்திரிகையாளர்
கதையாசிரியர்
பாடலாசிரியர்
வசனகர்த்தா
கட்சித்தலைவர்
மாநில முதல்வர்
குடும்பத்தலைவர்
பெரியாரின் பெருந்தொண்டர்
அண்ணாவின் அன்புத் தம்பி
அனைத்து நிலைகளிலும்
ஆட்கொண்டாலும்….
சங்கத் தமிழை
மூச்சாக கொண்ட
தங்கத்தமிழ் நீ….
நினைவிருக்கிறதா
அன்று அண்ணாவிடம் நீ
இதயத்தை இரவலாக
தந்திடு அண்ணா
இறந்தவுடன் நான்
கையோடு கொண்டு வந்து
கால் மலரில் சமர்பிப்பேன் என
இரவலாக கேட்டு பெற்று
இன்புற்று இருந்தாய் ….
காலத்தாலும் அழித்திட முடியா
கலைஞர் பெருமானே…
கன்னித்தமிழே …
தமிழறிஞரே..
உன் தமிழை எனக்கு
இரவலாக தந்திடு என
இந்நினைவு நாளில்
உன்னடி யாசகம் வேண்டுகிறேன்.
பா.திருநாகலிங்க பாண்டியன்
கீழச்சிறுபோது