நோன்பு

Vinkmag ad

( கவிக்கோ அப்துல் ரகுமான் )

அருளின் தேவதை

ஆண்டுக்கொருமுறை

கால வீதியில்காலெடுத்து

வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக !
அவள்தான் ரமழான் !
அவள் புன்னகையில்
ஆயிரம்  பூர்ணிமைகள் !கண்களிலே
கருணைச் சுடர்கள் !

அவள்
நான்கு வேதங்களை

ஈன்றளித்தபுனிதத்தாய் !

பாவக் கறைகளை

அவள்பரிவோடு

துடைக்கின்றாள் !

நரகக் கூண்டுகளில்

அடைபட்ட பறவைகளை
விடுதலை செய்கின்றாள் !

பிறைச் சுடர் கொண்டு

அக அகல்களில் எல்லாம்
ஆன்மீக வெளிச்சம்

ஏற்றி வைக்கின்றாள் !

பசியென்ற அமுதம்

பரிமாறிப் பூமியையே
சொர்க்கமாய் ஆக்குகிறாள் !
பணத்தைப்

பகிர்ந்து கொள்ள

ஏழைவரி !

பசியைப் பகிர்ந்து கொள்ள

உண்ணா நோன்பு !

எதுவுமே தேவையற்ற

இறைவன்

நோன்பை  மட்டும்

தனக்கென்று கேட்கின்றான் !

தருவதற்குகொடுத்து

 வைக்க வேண்டாமா ?
 
அடடா !

எத்தகைய  பெருமை !

இறைவனே நம்முன்

இரக்கின்ற ஏழை !

கொடை வள்ளல்நாமெல்லாம் !

வேலைக்கே கூலியுண்டு !

ஓய்வுக்கு யார் தருவார் ?

ஆனால்-வயிற்றின்

இந்த ஓய்வுக்கு
வல்லோன் இறைவன்

தன்னையே சம்பளமாய்த்

தந்து விடுகின்றான் !

உபவாசம் இருப்போரின்

வாய் வாசம் இறைவனுக்கு

கஸ்தூரி வாசம் !

இதுதான் அவன்

ஆலயத்தின்

நறுமணத் தூபம் !

இல்லாமல் பசிக்கின்ற

ஏழையரின் துயருணர
இருப்பவனைப்
பசிக்க வைக்கும்இணையற்ற
தத்துவமே நோன்பு !அங்க ரதத்தை
அங்கிங்கே அலைகழிக்கும்

ஐந்து குதிரைகளை

அடக்கும் கடிவாளமிது !

மனிதன்ஆசைகளின்

எடுபிடியாய்ஆடாமல்

அவைகளைத்தன்

எவலராய் மாற்றும்

அதிகார வலிமையிது !

உதிர வீதிகளில்

உலா வரும் சாத்தானும்

சிந்தை நடுங்கும்

சிகப்பு விளக்கு இது !

சொர்க்க வாசல்களைத்

திறக்கின்ற சாவியிது !

நரக வாசல்களையோ

அடைத்து விடும் பூட்டும் இது !

ஆன்மாவுக்கு

இதுகூட்டுப் புழு பருவம் !

ஞான மலர்தேடி
தேனெடுக்க உதவுகின்ற

வண்ணச் சிறகுகள்

வளர்வது இதிலேதான் !
பருகாமல் உண்ணாமல்
பட்டினி கிடந்து விட்டால்
நோன்பாகி விடாது !

ஐம்பொறியும் உறுதியுடன்

அனுஷ்டிக்கும் விரதமிது !

புறம்பேசல் என்னும்

இறந்த சகோதரனின்

இறைச்சி உண்ணும்

அநாகரீகம்நடத்தாமல்

இருப்பதேநாவின் நோன்பு !

அழுகிய வார்த்தைகளை

அருந்தாமல் இருப்பதே

செவியின் நோன்பு !

ஆபாசம் கண்டால்
அருவெருப்பதே

கண்ணின் நோன்பு !

ஆசைகள் பரிமாறும்
அறுசுவை விருந்தை
மறுப்பதேமனத்தின் நோன்பு !

இந்த உலகத்தின்

இன்பங்கள் என்னஅந்தக்
கதிர்நிலவைக்
கொண்டுவந்து
கைகளிலே கொடுத்தாலும்
சொர்கத்தின் எல்லாசுகங்களையும்

கொண்டுவந்துகாலடியில்

வைத்தாலும்இறைவா !

உன்அன்பின் முன்

இவையெல்லாம்தூசு என்று

எட்டி உதைக்கின்ற

ஏற்றத்தைப் பெற்றுவிட்டால்

அதுதான்ஆன்மாவின் நோன்பு !

இந்தப் பக்குவம்எய்திவிட்டால்
பின்உறக்கமும்
வணக்கமாகிவிடும் !

சுவாசமே தஸ் பீஹு
ஆகிவிடும் !
பிரார்த்தனை

பிறகுதேவை இல்லை -தனியாக !

ஏனென்றால்-நாமே
பிரார்த்திக்கப்படும்
பொருளாய் ஆகிவிடுகிறோம் !

நன்றி : சிராஜ் 1983 -ஜூலை )

News

Read Previous

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

Read Next

என் தேசம் = பாரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *