நோன்புக்கஞ்சி….
மலரும் நினைவுகள்…
மனித(மண)ம்… நிறைந்த என் நோன்புக்கஞ்சி….
அது ஒரு கனாக்காலம் ….
வரிசையாக வைக்கப்பட்ட-
நான்கு அடுப்புகள்!
கழுவி கவுத்தி-
வைத்திருக்கும்-
சட்டிகள்!
ஒரு பக்கம்….
தேங்காய் திருக-
ஒரு கூட்டம்!
பூண்டை தோல் –
உரிக்க ஒரு-
கூட்டம்!
பள்ளியின் மூலையில் அடுக்கி வைக்கப்பட்ட அரிசி மூட்டையில் அரிசியை ஓட்டை-
போட்டு -எடுத்து செல்லும்
எலி கூட்டம்!
சிறு உதவிகளுடன்-
அன்றைக்கு உதவும்-
இளைஞர்கள் …
டேய் !-
மாப்ள!-
மருமகனே!-என
உறவு முறையுடன்-
கூப்பிடும்-
பெரியவர்கள்!
தெரிந்து செய்த-
தப்புகளுக்கு-
கிடைக்கும் பெரியவர்களின்
திட்டுகள்!
அதே வயது ஒத்தவர்-
“ஏன்பா!? சின்ன பசங்கள-
திட்டுறே”!என கிடைக்கும்
ஆதரவுகள்!
அதைபற்றியெல்லாம்-
கவலை படாத … கண்டு கொள்ளாத
இளைஞர் கூட்டம் …
இரண்டு சட்டி கஞ்சி-
ஊரில் வாங்கிட –
வருபவர்களுக்கு!
மற்ற இரண்டும்-
பள்ளியில் நோன்பு-
திறப்பவர்களுக்கு!
மாலை நேர-
வேலை-
தூக்கு சட்டியுடன்-
குழந்தைகள்!
தூக்கு சட்டியை தூக்கியவர்களை-
தூக்கி கொண்டுவரும்-
“வாப்பாக்கள்”!
அந்தி பொழுதும்-
வரும்…!
வரிசையாக வைக்க பட்ட மண் கொட்றாக்கள்
நோன்பு கஞ்சிகளுடன்-
அதன் அருகில்-
வைத்திருக்கும்-
பேரீத்தம் பழங்கள்!
பிரயாணத்தில்-
இருந்தவர்கள்!
வியாபாரம் செய்ய-
வந்தவர்கள்!
பெரிவர்கள்!
சின்னவர்கள்!
அவர்களுக்கு பிடித்த-
இடங்களில் அமர்ந்தார்கள்!
யாரையும் “ஒதுங்கிட”-
சொல்லவில்லை!
அந்த உரிமை-
எவருக்கும் இல்லை!
இறைவா!
உன்னுடைய உணவை கொண்டே-
என்னுட நோன்பை திறக்கிறேன்-
என்னிடம் இருந்து ஏற்றுகொள்வாயாக!
என்பதை இமாமால் அரபியிலும் தமிழிலும்
சொல்லப்பட்டது!
அதனை அனைத்து-
வாய்களும் சொல்லியது!
பேரீத்தம் பழங்களை-
உண்டார்கள்…
கஞ்சியை
குடித்தார்கள்!
பார பட்சம்-
காண கூடாதுன்னு-
பள்ளி சீருடை!
பாகு பாடு இல்லாமல்
நோன்பை திறக்கவா!?- பள்ளியில்
நோன்பு கஞ்சி முறை…!!!?
கஞ்சி இதமான-
சூட்டுடன்-
தொண்டையில்-
இறங்கும்…
நோன்பாளியின் பசியை போக்க-
கஞ்சி ஊற்ற ,சர்பத் கலக்க …. உறவுகளுடன் உதவியதை
எண்ணுகையில்-
என் மனதின் ஓரத்தில் இன்றும்
இனிக்கிறது…
இன்றும் உறவுகள் இணைந்து , நண்பர்கள் கலந்து , மசாலாக்களால் அல்ல .. மனித மனங்களால் உருவான என் நோன்புக்கஞ்சியை தேடுகிறேன் …
என் தொண்டையில் இறங்கிய நோன்புக்கஞ்சியில் மசாலா மனமும் இல்லை … உறவுகளின் வாசனையும் இல்லை ..
ஏன்..? என விசாரித்ததில் .. இப்போதெல்லாம்
உறவுகளைக்கொண்டல்ல…
கஞ்சி கூலிக்கு ஆள்கள் வைத்துதான் காச்சப்படுகிறதாம் …
எங்கோ உரைக்கிறது-
பட்ட மிளகாய்-
கடித்தது போல!
மரத்தில்…உதிரும் இலைகள்-
முளைப்பதுண்டு-
கிளைகளிலே!
மனதில்”உதிர்ந்து விலகிய உறவுகள்”பல பொழுதுகளில்
திரும்புவதில்லை!-
இவ்வுலகிலே!
இன்று … இருப்போரின் இதயங்கள்
இறுகிபோனது !
சுழல்கின்ற பூமியும்
சுயநலமானது !
உதவுகின்ற எண்ணமும்
உலகினில் குறைந்து போனது !
இன்று…பேரிடர் நிகழ்ந்தால்தான்
ஓடிவரும் நிலையிங்கு !
பெருபான்மை நேரங்களில்
ஒதுங்கியே இருப்பதிங்கு !
ஆம்…. மனித மனங்களால் உருவான என் நோன்புக்கஞ்சியை தேடுகிறேன் …
என் தொண்டையில் இறங்கிய நோன்புக்கஞ்சியில் மசாலா மனமும் இல்லை … உறவுகளின் வாசனையும் இல்லை ..
மௌலவி செய்யது அஹமது அலி . பாகவி