நூறாவது நாள்
நூறாவது நாள்
ஊரடங்கு அறிவிச்சு
நூறு நாளு ஓடிப்போச்சு
ஊருலகம் ஆடிப்போச்சு
பாரு முழுசும் நாறிப்போச்சு
தொழிலெல்லாம் நசிஞ்சி போச்சு
தொழிலாளர் பொழப்பு போச்சு
நிலைமை கையை மீறிப்போச்சு
தலைமையெல்லாம் துவண்டு போச்சு
வீதியெல்லாம் நரகமாச்சு
வீடு இப்போ சொர்க்கமாச்சு
கூடியெல்லாம் உக்காந்து
கூட்டாஞ் சோறு திங்கலாச்சு .
வீட்டிலிருந்து வேலை செஞ்சு
வீண் செலவைக் குறைச்சாச்சு .
வரி வருமானமெல்லாம்
வைத்தியத்துக்கு செலவாச்சு
இலவசங்கள் பெருகிப்போச்சு
விலைவாசி ஏறிப்போச்சு .
குடி கெடுக்கும் குடியைக்கூட
கொஞ்சகாலம் நிறுத்தியாச்சு.
இடுகாடும், சுடுகாடும்
இடமின்றி நிறைஞ்சுபோச்சு .
எந்த ஜாதி, எந்த மதம் ,
என்ன பதவி, எவ்வளவு சொத்து
என்றெதுவும் பாராமல்
எல்லோரையும் தாக்குது
கூலிக்காரன் பொழைப்பு
இப்போ நாறிப்போச்சு – பல
கோடீஸ்வரன் நிலைமைகூட
கொஞ்சநாளில் மாறிப்போச்சு ,
தொட்டால் பரவுமென்றார்
தும்மினால் பரவுமென்றார்,
கைகளைக் கழுவு என்றார்
கவசம் போடு என்றார் – முகக்
கவசம் போடாவிட்டால்
திவசம்தான் நடக்குமென்றார் .
தனிமைப்படுத்திக்கொள்
தடுக்கலாம் பரவல் என்றார்.
அல்லா , இயேசு, ஈசன் ,
அத்தனை சாமிகளும்
பக்தனைக் காக்காமல்
பரிதவிக்க விட்டுவிட்டார் .
மரணம் அரவணைக்கும்
தருணம் இதிலிருந்து
மனிதரைக்காப்பாரோ ?
மருந்தொன்று தருவாரோ ,
என்று தணியும் இந்த
கொரோனாவின் தாக்கம்,
என்று கிடைக்கும் எமக்கு
நிம்மதியான தூக்கம்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
Tags: நூறாவது நாள்