நாம் நினைப்போம் !
நாம்நினைப்போம் !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )
உள்ளத்து உணர்வுகளை உலகினுக்கு எடுத்துரைக்கும்
கள்ளமில்லா மனமுடயார் கவிதைகள்தாம் வாழ்கிறது
வள்ளுவரின் கவிதையின்று வைகத்தில் நிலைப்பதற்கு
கள்ளமில்லா அவர்மனமே காரணமாய் ஆகியதே !
எல்லோரும் வள்ளுவராய் இருந்துவிட முடிவதில்லை
என்றாலும் இயன்றவரை ஏற்றதையே எடுத்துரைப்பார்
நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நாளுமவர் தந்துவிடின்
நாட்டிலுள்ளார் மனங்களிலே நன்மதிப்பைப் பெற்றிடுவார் !
சங்ககால கவிதையெலாம் நாம்படித்துப் பார்த்துவிடின்
இங்கிதமாய் பலகருக்கள் இருப்பதையும் உணர்ந்திடலாம்
எங்களது தமிழ்மொழியின் மங்காத செல்வங்களாய்
இருக்குமந்த அருமையினை எல்லோரும் அறிந்திடலாம் !
சொற்சுருக்கம் சுவைநுணுக்கம் அத்தனையும் அரவணைத்து
சுந்தரந்தமிழ் கொண்டு செப்பிநின்ற கவிதையது
இப்பொழுது அவையாவும் எல்லோரும் படிக்காமல்
எம்மேக்கும் பீயேக்கும் எடுக்கின்றார் படிப்பதற்கே !
பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற பாடமாய்
பண்டிதர்க்கும் புலவர்க்கும் பரீட்சிக்கும் புத்தகமாய்
பண்டைத் தமிழிலக்கியங்கள் இருக்கின்ற பாங்கினையே
பார்க்கின்றோம் எனநினைக்கில் பரிதாபம் எழுகிறது !
சங்கத் தமிழ்படித்தால் சரியான கவிதைவரும்
பொங்கிவரும் தமிழுணர்வை புதுவழியில் செலுத்திடலாம்
கவிதையெனும் பெயர்சூடி வருகின்ற கவிதையெலாம்
காலமென்னும் வரலாற்றில் காணாமல் போய்விடுமே !
சாகாத இலக்கியங்கள் நாம்படைக்கத் தேவையில்லை
மனம்நோவாத இலக்கியக்கியங்கள் படைத்துவிட நினைத்திடுவோம்
வாழ்நாளை வளமாக்கும் வகையிலே படைத்துவிடின்
வரவேற்று அனைவருமே வாரியே அணைத்திடுவார் !
புழுதியிலே புரழுகின்ற இலக்கியங்கள் புறந்தள்ளி
பழுதில்லா வகையான இலக்கியங்கள் படைத்தளிப்போம்
நிலவுலகில் யாவருமே நினைந்துநிற்கும் வகையினிலே
நலமுடைய இலக்கியங்கள் படைதளிக்க நாம்நினைப்போம் !