நஞ்சு என்று நீநினைத்து நாடா மதுவை இருந்திடுவாய் !
நஞ்சு என்று நீநினைத்து நாடா மதுவை இருந்திடுவாய் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …… மெல்பேண் …. ஆஸ்திரேலியா
மதுவை நாடிப் போகாதே
மரணம் உன்னை காத்திருக்கு
அதுவே உந்தன் வாழ்வினிலே
ஆனந்தம் இல்லா அழித்துவிடும்
கதவை தட்டும் கொரனோவோ
காலம் கடந்தால் ஓடிவிடும்
மதுவோ உன்னைக் காலனிடம்
விரைவாய் கூட்டிச் சென்றிடுமே !
குடித்துத் தெரிவில் நீகிடந்தால்
ஓடித் திரியும் தெருநாய்கள்
பிணமாய் உன்னை நினைத்தபடி
பிய்த்து உதற கூடிவரும்
தெரிவில் போகும் சனமெல்லாம்
திட்டித் தீர்த்தே சென்றிடுவார்
எதற்கும் உதவா நிலையினிலே
இருப்பாய் என்பதை எண்ணிவிடு !
கோடி இருப்பார் குடித்தழிப்பார்
குடிசை இருப்பார் குடியழிப்பார்
மாடி மனைகளில் இருப்பார்க்கு
வசதி வாய்ப்பு நிறைந்திருக்கும்
குடிசை ஒன்றே கதியாக
வாழும் உனக்கு எதுவிருக்கு
உயிர்தான் உனக்கு உறுதுணையே
அதையும் குடியால் அழித்திடாதே !
நஞ்சு என்று நீநினைத்து
நாடா மதுவை இருந்திடுவாய்
அஞ்சியஞ்சி உன் குடும்பம்
அழுதே வாழ்க்கையைப் பார்க்கின்றார்
பிஞ்சுக் குழந்தை முகம்பாரு
பெற்றதாயின் பேச்சைக் கேள்
கையைப் பிடித்த மனையாளும்
கதறிநிற்கும் குடியை விடு !