தோற்றமும், பின்புலமும், புது நினைவும் !
முதல் கவிதை..!
தோற்றமும், பின்புலமும், புது நினைவும் !
கவிஞர். மஸ்கட் மு.பஷீர்
துண்டுக் காகிதங்களில்
துளிர் விட்ட வார்த்தைகள்
தூளியில் கூடுகட்டி
தூங்காமலே போனது – எங்கு
தேடியும் கிடைக்காமல்- இறுதியில்
தேடினேன் கிடைத்ததென்
மனதில் மறைவில் !
கன்னிக் கவிதை
கன்னியர் பார்வையால்
கர்ப்பம் தரிப்பது
காலங்கால உண்மை !
மரபு மாறாத
அந்த சுகப்பிரசவம் என்னிலும்
சுகமாய்ப் பிறந்ததில்
சுவைதானே சொல்வதற்கு !
X
அன்று.. என்
பள்ளிப் பருவம்
பதினாறாய் மலர்ந்தது !
துள்ளிப் பறந்தன கவிதைப்
பட்டாம் பூச்சிகள் !
கள்ளிக் கண்களின்
கடையோரப் பார்வையால்…
முள்ளால் குத்தியக்
கள்ளியின் பாலாய்
வெள்ளியாய் பரந்தது
மனதில் கூடவே
சுரந்தது காதல்?
கறந்தது கவிதை!
X
மறந்து விட்டேன் நான்…!
முதல் கவிதை என்பது
முதலில்
வரைந்த கவிதையா ?
மனதுள் வந்து
நனைந்த கவிதையா ?
மண் ஒட்டுச் சாளரத்தில்
விண் உடைத்த மழைத்துளி
வீழ்ந்து வடிந்த
வெண்ணிய மழைநீரில்
விளைந்ததுதான் என்
முதல் கவிதை !
நெஞ்சில் ஈரமாய்
மழையின் சாரல்…
கொஞ்சும் தமிழால் மனதில்
கவிதைச் சாரல் !
எத்தனையோ கவிவரிகள்
ஒவ்வொரு மழையிலும்…
அதில் நனைந்த பசுமைச்
செடிகொடி, மரங்களில்..,
இசைத்த குயிலின் குரல்களில்
இன்னும் ரீங்காரமாய் !
எழுத்தில் பதிக்க இயலாது போன
எண்ணற்ற வரிகள்;
மனதை விட்டு விலகிப்போனது
மழை விட்டு உலர்ந்த
மண்போல !
அந்த எண்ண விதைகள் மட்டும்
என்னோடு புதைந்து கிடக்கின்றன !
அதிலிருந்து தான் பிறக்கின்றன
புதுப்புதுக் கவிதைகள்
இன்றும் ;
மண்மேல் கருத்தரித்துப் பிரசவிக்கும் தாவரம் போல !
முதல் கவிதைப் பிரசவம்
குறைப் பிரசவம் ஆனதால்…
பின்பிறந்த குழவியை
பிரசுரிக்கத் தருகிறேன் !
என் நினைவில் இன்றும்
வளரும் கவிதைச் செல்வம்
இதுதான் !
முதலாய்க் கொள்க…
என் முதல் செல்வத்தை
விதையாய்க் கொள்க !
X X X X
முதல் கவிதை !
ஞாயிறு !
காலை ஞாயிறுகளில்
கர்த்தரை நேசித்தாள்
காவல் கிடந்து நானோ
அவள்
பாதம் பூஜித்தேன் !
X
உன்
காலடி படுவதால் தான்
இந்தத் தெருவீதியே
மணல் நட்சத்திரங்களால்
புலர் காலையில் கூட
பூத்து விரிகிறது !
அது
பொன்னாய்ச் சிரிக்கிறது !
மனதுக்குள் உன்
விழியின் ஓரம் மட்டும்தான்
பதிகிறது !
கனவில் உன் பாதி
முகம்தான் பிரகாசிக்கிறது !
காதலைத் தருவதில் கூட
கஞ்சத்தனம் உனக்கு !
காத்திருக்கிறேன் அடுத்த
ஞாயிறின் வருகைக்கு– அதில் சூரியக் குளியலால்
மனம் நனைவதற்கு !!
X X X X
தமிழால் பிறந்தது என்
கவிதைக் காதல்…
அதுபோதும் காலமெல்லாம்
மனம் குளிர்வதற்கு !
வேகமாய்ப் போகும் நாட்கள்
சோகமாய் விழுந்தது அதில்
குவியலாய் முட்கள் !
காலச் சக்கரத்தால் -நாம்
தூக்கி வீசப்பட்ட
காகிதப் பூக்கள் !
கண்ணெட்டாப் பார்வையில்
கால இடைவெளிகளில்
காணாமல் பொனது – நம்
காத்திருப்பு மனங்கள் !
நிச்சயமாய்ச் சொல்வேன்- அவை
‘ஊன்’ காதல் அல்ல
ஊனமாகிப் போவதற்கு !
உண்மை அன்பில்
மௌனம் மொழியாய்ப்
பேசிய கவிதைக் காதல் !
கவிஞர். மஸ்கட் மு.பஷீர்