தமிழ் இன்று தவிக்கிறதே!
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
அன்று தமிழ் எத்திசையிலும் ஒலித்தது
இன்றோ திசை தெரியாமல் தவிக்கிறது
அன்று தமிழ் விரிந்து வளர்ந்தது
இன்றோ தமிழ் சுருங்கி அழிகின்றது.
வீட்டிலே வளரவேண்டிய தாய்த்தமிழை
வீதியிலே அனாதையாய் தவிக்கவிடலாமா?
தமிழர்களுக்குக் கிடைத்திட்ட தமிழ் புதையலை
தடமில்லாதபடி மண்ணிலே புதைக்கவிடலாமா?
முனைப்பாகத் தமிழை வளர்க்காவிட்டால்!
மூத்த மொழியென பட்டமே மிஞ்சும்
வரலாறு படைத்து வரும் தமிழ் மொழியை
வரலாற்றில் படிக்கும் நிலை வரலாமா?.
தமிழுக்குச் செம்மொழி சிறப்புப் போதுமா?
தவிக்கும் தமிழைக் காப்பாற்ற வேண்டாமா!
அந்நியமொழியை அரியணையில் அமர்த்தினால்
அடிமையாவோமே தமிழ்ர்கள் அனைவரும்.
தமிழ்த்தாயின் எச்சரிக்கைக் கேளாவிட்டால்
தமிழர்களில் காதில் ஒலிக்காவிட்டால்
தமிழ்மொழியின் திசை அறியாவிட்டால்
தமிழினி சொப்பனத்திலே சுகமாய் வாழும்.
………………………………..
Tags: தமிழ்