இசை : செஞ்சுருட்டி தாளம் : ஆதி
விடுதலை இல்லாத போது — மொழி
ஏது? — இனம்
ஏது? — பண்டை
மேலான வரலாறும் ஏது? நீ
விலக்கல் இலாததமிழ் இலக்கியத் தின்சல்லி
வேரும் சிறிதும் நிலைக் காது
கொடிநாட்டி வாழ்ந்தனை மண்ணி — லதை
எண்ணித் — தமிழ்
எண்ணி — அந்தக்
கொடியவரை நடுங்கப் பண்ணி — கொடுங்
கோலைமுறித்த பின்புன் வேலை முடிந்ததென்று
கொட்டடா முரசு நண்ணி
தாய்க்கும கன்செய்யும் தொண்டும் — ஒன்
றுண்டு — நன்
றுண்டு — தாய்
தளைநீக்க வேண்டும்வெ குண்டு — மேலும்
தமிழன்நீ தமிழ்ப்பழங் குடிக்கோர் இழுக்கென்றால்
சாக்காடும் உனக்குக்கற் கண்டு.
பாக்கியம் பெற்றவன் நீதான் — புலி
நீதான் — சிங்கம்
நீதான் — இந்தப்
பாராண்ட மறத்திஉன் தாய்தான் — தமிழ்ப்
பண்பாட்டை மிதிப்பவன் பழிவாங்கப் படவேண்டும்
சும்மா இருந்தால் நீயோர் நாய்தான்.
தெற்கை வடக் காண்ட தெந்நாள்? — இல்லை
முன்னாள் — அஃ
திந்நாள் — கேள்
சீர்பட வேண்டுமன்றே உள்நாள்? — நல்ல
திருவேண்டும் புகழ்வேண்டும் தமிழ்க்குரி மைவேண்டும்
தீயர் தொலையும் நாளே பொன்னாள்
பொற்குவை தன்னைக் கரண்டி — யாற்
சுரண்டிப் — பல
வண்டி — ஏற்றிப்
போனான் நமக்கே திங்கே உண்டி? — உன்
பொய்யாத வாழ்வெங்கே மெய்யான உணர்வெங்கே
போயின வோஇருள் மண்டி?
இன்றே உனது முதல் வேலை — இது
காலை — கொடுங்
கோலைத் — துண்டாய்
ஒடிக்க வேண்டும்திறத் தாலே — பார்
உன்படை! உன்னினம் நில்லதன் முன்னணி
உனக்குப் பகைவர் எந்த மூலை?
நன்றிக்கு வாழ்த்திட வேண்டும் — உரம்
வேண்டும் — திறம்
வேண்டும் — உன்
நாட்டிற்கே நீவாழ வேண்டும் — நம்
ஞாலப் பெரியார் செல்லும் பாதையினை விடாதே
விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்! |