செவி கொடு ! சிறகுகள் கொடு ! ——– தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

Vinkmag ad

 

இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான், சில வேளை புயலாகவும் ஆகி விடுகின்றேன் !

முரண்களோடு சமரசம் செய்து கொள்ள முடிவதில்லை என்னால் !

அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை !

சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள்முனையாகி விடுகிறேன் ! என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன. என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன !

ஆனாலும் என் சுழற்சிகள் எப்போதாவது சுனாமியின் எழுச்சியாகி விடுவதை உணர்கிறேன் !

நீ இருப்பது பொறுமையாளர் பக்கம் அல்லவா !

என்னையும் அப்பக்கம் முன்னிலைப்படுத்த உன் கண்ணிய அருளுக்காக கையேந்துகிறேன்.

இறைவா ! தாமரை தண்ணீரில் பூப்பது போல, என்னையும் சகிப்புத் தன்மைக்குள் தடம் பதிக்க வைப்பாயாக !

வாழை எளிமைக்குள் வசிப்பதைப் போல, என்னையும் அந்த இயல்புக்குள் இடம் பெற வைப்பாயாக !

தென்னை உயரத்துக்குள் காய்ப்பதைப் போல, என்னையும் உச்சத்தில் சரங்கொள்ள வைப்பாயாக !

மல்லிகை வாசனைக்குள் ஊரை மகிழ்விப்பது போல, என்னையும் உறவுக்குள் உவகை கொள்ள வைப்பாயாக !

என் கோரிக்கைகள், கோஹினூர் வைரங்களுக்காக அல்ல, உன் எச்சரிக்கைகளின் உச்சரிப்புக்காகவே !

இறைவா ! நீ நினைத்தால் உப்புக் கல்லையும் வைரக் கல்லாக உயர்த்தி விடுகிறாய் !

நீ விரும்பினால் செப்புக் காசையும் தங்கக் காசாகச் செல்லுபடியாக்கி விடுகிறாய் ! நீ சினந்தால் கோபுரங்களையும் குப்பை மேடாக குறுகிடச் செய்து விடுகிறாய் !

நீ அரவணைத்தால் வெறும் ஈயையும், தேனீயாக விளங்க வைத்து விடுகிறாய் !

தொந்தரவு தராத தூய உறவுகளை நிலைக்கச் செய் அது போதும் !

ஆதரவு தருகின்ற அன்பான நட்புகளை அருகிலிருக்கச் செய் அது போதும் !

இறைவா ! சகலமும் அகலட்டும், உன் அருள் மட்டும் இருக்கட்டும் !

உலகமும் துலங்கட்டும், உன் மறுமையும் விளங்கட்டும் !

மாறான வழிசெல்ல எனக்குள் பயம் பிறக்கட்டும் !

நேரான வழிவாழ எனக்கு ஜெயம் கிடைக்கட்டும் !

அடியார்களின் வேண்டல்களை அதிகம் விரும்பு நீ இந்த எளியவன் வேண்டல்களை – விண்ணப்பங்களைக் கிடப்பில் போடாமல் உடனடி உத்தரவிடுவாயாக !

பிரபஞ்சப் பேராளனே இந்தச் சிறுபிள்ளையின் வேண்டல்களுக்குச் செவி கொடு ! சிறகுகள் கொடு !

என் வேண்டுகோள் என் வாசல்களில் கழுதைகள் கத்த வேண்டாம், சேவல்கள் கூவட்டும் !

என் நேசங்களில் வான் கோழிகள் வசப்பட வேண்டாம் ! கோலமயில்கள் தோகை விரியட்டும் !

என் பாசங்களில் வேப்பங்காய்கள் வேண்டாம் வெள்ளரிக்காய்கள் வரட்டும் !

நான் தடுமாறுவதும் இல்லாமல் தடம் மாறுவதும் இல்லாமல் சமுதாயத்தில் நடமாட விரும்புகிறேன் !

இறைவா ! அடைமழை பெய்கின்ற அந்த வேளைகளில் குடையொன்று கொடு அது போதும் !

பணமுடை ஏற்படுகின்ற அந்தத் தருணங்களில் தனமுடையவர் நட்பைத் தா அது போதும் !

நெருக்கடியான அந்த நேரங்களில் உருப்படியான எண்ணங்களை தா அது போதும் !

என் வரும்படிகள் நன்றாய் வரும்படிச் செய் அது போதும் !

விழாக்கால தள்ளுபடி வியாபாரம் அறிவிக்கும் போது வாங்கும் படி என்னை வை ! அது போதும் !

 

நன்றி : நர்கிஸ் 2011  – மே 2011

News

Read Previous

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

Read Next

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் வ‌ஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *