சகுனம்!
சகுனம்!
குறுக்கே சென்றதால்
சகுனம் சரியில்லை!
பேருந்தில் அடிபட்டது
பூனை!
விதவையைக் காணாது
விலகிப் போனான்
விதவையாகிப் போனாள்
அவன் மனைவி!
ஊருக்கே குறி சொல்லுமாம்
பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம்
துள்ளி
நோயுற்ற மனிதன்
நோக்குவானா சகுனம்?
சாலையைக் கடக்கும் திசைகாட்டி
சகுனம் பார்த்தா வழிகாட்டும்?
வேலைக்குச் செல்ல
வேண்டுமா சகுனம்
நாளைக்குக் கிட்டுமா
நல்லதொரு தருணம்?
பணத்தைக் கீழிருந்துப்
பற்றிக் கொள்ளச்
சகுனத்தைப் பார்க்காமல்
சட்டென எடுப்பதேன்?
பிறப்பும் நாம் நினைக்காமல்
இறப்பும் நாம் நினைக்காமல்
பிறக்கும் சகுனம் மட்டும்
பிறகு எங்கிருந்து வந்தது?
எண்ணெய்ப் பானை
எதிரே வரக் கூடாதென்றால்
எண்ணெய் வள நாட்டில்
எப்படிச் செல்வம் கொழித்தது?
விறகுடன் வருபவர்
விதியினை மாற்றுவாரா?
பிறகுதான் புரிவாய்ப்
பிழைகள் உன்னிடம்!
மண்வெட்டி எதிர்ப்படல்
மனிதனுக்கு ஆகாதெனின்,
மண்வெட்டி மனிதனும்
மாளிகைக் கட்டுவதேன்?
தும்மல் ஓசை
துளிர்க்கும் கெட்டசகுனமா
விம்மும் மூச்சை
விடுப்பது எங்ஙனம்?
ஆந்தை அலறல்
ஆகாதெனின், ஆளும்
வேந்தர் இரவில்
வீதியுலா வந்ததெப்படி?
போர் வீரனைப்
போர் வாளுடன்
பார்த்தல் கூடாதெனின்
யார்தான் வீரம்பெறுவர்?
வண்ணானைத் துணிகளுடன்
வருதலைக் காணக் கூடாதெனின்
என்னாளும் அழுக்காகிப் போகுமே
எண்ணமும் இல்லமும்!
பாய்விற்பவர் வருதலைப்
பார்ப்பதுக் கூடாதெனின்
பாய்வாங்கிப் படுக்காமல்
பசுந்தரையில் படுப்பீரோ?
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
KALAM SHAICK ABDUL KADER
ACCOUNTANT
GRANITE CONSTRUCTION COMPANY
POB 842
ABU DHABI, UAE