காந்தி பிறந்த நாள்
நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணலே
அதன் பிறகு நாங்கள் உன்னை எண்ணலே- ரூபாய்
நோட்டில் உன் படத்தைப் போட்டு
அதைத்தான் தினமும் எண்ணுகிறோம்.
சத்தியமேவ ஜெயதே என்றீர் – அது
சாத்தியமில்லை எமக்கெல்லாம் .
மத ஒற்றுமை வேண்டும் என்றீர் – எங்களுக்கு
மத வேற்றுமைதான் ஒட்டு வங்கி .
விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பென்று சொன்னீர் – அந்த
விவசாயத்துக்கு கூட மறுக்கப்படுகிறது தண்ணீர் ,
தண்ணீருக்கான சண்டையில் சிந்துகிறது செந்நீர்
விவசாயிகள் கண்களில் பெருகுது கண்ணீர்
நதிநீர் உபயோகிக்கும் சுதந்திரம் இல்லை .
ஊழலில்லாத அரசுத்துறையொன்றும் இல்லை
லஞ்சம் கொடுக்காமல் வேலை நடப்பதில்லை
பாலியல் கொடுமைக்கு அளவே இல்லை .
அரசியலில் தூய்மை அறவே இல்லை
அடிப்படை வசதிகள் மக்களுக்கு இல்லை
ஏழைகளுக்கு நீதி கிடைப்பது இல்லை
மக்கள் வரிப்பணம் போகுது கொள்ளை
அந்நிய நாடுகளில் பதுங்குவது பெருந்தொல்லை
சுதந்திர தினத்தன்று கொடியேற்றக்கூட
சுதந்திரமாய் வரமுடியவில்லை எங்கள் தலைவர்கள்
இதற்கா வாங்கினோம் சுதந்திரம் என்று
இதயம் வருந்தாத நாட்களே இல்லை .
அந்நியரிடம் போராடி வெற்றி பெற்ற நீரே கூட
அகிம்சையினாலோ, வேறு வழியிலோ ,
நம்மவரிடமிருந்து சுதந்திரம் பெற்றுத்தருவது
சாத்தியமாகுமா ? சந்தேகம்தான் .
கோட்ஸே உம்மை ஒரே முறை கொன்றுவிட்டான் – நாங்களோ
உம் கொள்கைகளை தினம் தினம் கொலை செய்கின்றோம் .
இருப்பினும் ,
வாழ்க நீ எம்மான் , இன்று பள்ளியிலிருந்து விடுதலை .
வாழ்க நீ எம்மான் , இன்று பணியிலிருந்து விடுதலை
வாழ்க நீ எம்மான் ,இன்று குடியிலிருந்து விடுதலை .
வாழ்க நீ எம்மான் , இன்று லஞ்சத்திலிருந்து விடுதலை.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .
Tags: காந்தி பிறந்த நாள்