கவிக்கோவுக்கு இன்று பிறந்த நாள்!
மதுரையில் பிறந்த
மதுரம் நீ.
அதன் சாரம்,
புதுகையில் இருந்து
ஊற்றெடுத்தது என்பதே
உன் பூர்வீகம்.
உர்தூ குடும்பத்து
உதயத்தைத்
தமிழ்த்தாய்
தனதாக்கிக் கொண்டாள்.
வைகைக் கரையில் தொடக்கம்
வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.
ஆற்றில் வருகின்ற
அலையெல்லாம்
புதிதானாலும் அதன்
பொதுப் பெயர்
தண்ணீரே.
நீ,
வெறும் தண்ணீர் அல்ல;
பாலாறாய்,தேனாறாய்ப்
பாயத் தெரிந்தவன்.
உன்
சிந்தனை,
செந்தமிழைச்
செழுந்தமிழாக்கியது;
மனதை
உழுந்தமிழாக்கியது.
அதனால்
உள்ளங்கள்,
வெளிச்ச
வெள்ளங்களாயின.
முள் கிரீடங்களைக்
கழற்றவும்
சிலுவைகளை இறக்கவும்
பல பேருக்குப்
பாடம் நட்த்தியவன் நீ.
இலக்கியப் பயணம்
மேற்கொண்டவர்களெல்லாம்
இலக்கை அடைந்தவர்கள்
இல்லர்.
அது உனக்கு
அருளப்பட்டது.
பயணத்தைப்
”பால் வீதி”யில்
தொடங்கியவனா நீ!
இன்றுன் வீட்டிற்குள்ளேயே
இருக்குக்கும் பறவையாகிவிட்டாயே,
கஃபாவின் அபாபீல்களைப் போல்!
இன்று,
உனக்கு உன் இல்லமே
ஹிரா’க் குகை.
நாளை அங்கிருந்துதான்
“பாலை நிலா”
பயணப்பட இருக்கிறது.
இம்மையின்
செம்மையும் சிகரமும்
இதுவெனும்
ஆன்றவிந்தடங்கிடும்
சான்றாண்மையால்தான் இது
சாலும்.
ஏழு,எழுபதெல்லாம்
அரபு மொழியில்
பல்கிப் பெருகும்
பலவற்றைக் குறிக்கும்.
உனக்கின்று வயது
எழுபத்தேழு!
வாழ்வாங்கு வாழ,
வாழ்வு இதுவென
வாழும் உனை
வாழ்த்தி மகிழ்கிறேன்.
—ஏம்பல் தஜம்முல் முகம்மது.