கண்ண தாசனின் …..
கண்ண தாசனின் ஒவ்வொரு வரியும்
கவிதை யல்லவே காவியம்!
கிண்ணம் நிரம்பிய போதையி லே, அவன்
கிறுக்கிய தெல்லாம் ஓவியம்!
போதவிழ் மலர்போல் திரைஇசைப் பாட்டில்
போட்டுவைத் தான்ஒரு புதுப்பாதை!
காதுக்குள் நுழைந்த இவன்தமி ழால்தான்
காற்றுக்குக் கிடைத்தது மரியாதை!
கொட்டிய முதலில் பெட்டியை இழந்து
நட்டத்தை விலைக்கு வாங்கினான்!
வட்டிக்கு மேலே வட்டியைப் போட்டு
வானுயர் புகழைத் தாங்கினான்!
கொம்பு நறுந்தேன் மந்திரக் கவிதை
கொடுத்த இன்னொரு திருமூலன்!
கம்பனை வெல்வான் இவன், என் றஞ்சிக்
கவர்ந்துகொண் டான், அக் கொடுங்காலன்!
புவியர சேத்தும் கவியர சென்றே
புகலும் இலக்கிய வரலாறு!
“சிவகங்கைச் சீமை”யில் “முத்து” விளைந்தது
செந்தமிழ் அன்னையின் பெரும்பேறு!
… கவிச்சுடர். கவிதைப்பித்தன்.
Tags: கண்ண தாசன்