இறை நேசர்கள்

Vinkmag ad

இறை நேசர்கள்

 

 

தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன்

 

 

இறை நேசர்கள்

‘கலிமா’வில்

வலிமார்களாக

வாழ்பவர்கள் !

அந்த

இறைநேசர்கள்

‘கஃபர்’ கப்பல்களாக

அருட்கடலில் மிதந்து கொண்டு

நயணங்களுக்குப்

புலப்படாமல்

நங்கூரம் போல்

உயிர் வாழ்பவர்கள் !

 

 

 

’பச்சைநிறமாக’ இருந்தால்

பட்டென்று சொல்லிவிடலாம்,

காய்ந்தவை யாவுங்

காயென்று !

ஆனால்,

பச்சை வாழைப்

பழமட்டும் விதிவிலக்கு !

அதுபோல்,

மானிடருள் –

மூச்சறுந்த மறுகணம்

முடிவுகட்டிவிடலாம்,

பிணமென்று !

ஆனால்,

இறை நேசர்கள் மட்டும்

இதற்கு விதிவிலக்கு !

 

 

அக்னி அணைந்திருந்தாலும்

நீறுபூத்திருக்கும்

நெருப்பைப்போல்,

காண உயிரணைந்தாலும்

கஃப்ருக்குள் வாழ்பவர்கள் !

 

 

இவர்கள் –

வாழுங் காலத்தில்

இறந்தவர்கள்,

எனவே தான்

இறந்த பின்னும்

அவர்களை

வாழச் செய்கின்றான்,

வல்ல இறைவன் !

 

 

உறக்கத்திற்கு

உள்ளறையும்

ஓய்வுக்கு

வெளிமுற்றமும்

ஒதுக்கப்பட்டது போல்,

துதிப்பதற்காகப்

பள்ளிவாசல்களும்,

இறைநேசர்களை

மதிப்பதற்காகத்

தர்காக்களும்

தலையாயவை !

 

 

 

தூய இறைவனின்

தொடர்புக்கு –

பள்ளிவாசல்கள்

தொலைபேசியகமென்றால் –

தர்காக்கள்

தபால் பெட்டிகள் !

 

 

 

பட்டாம் பூச்சிப்

பகட்டை வெறுத்துக்

கூட்டுப் புழுவாகத்

தங்களைக்

குறுகிக் கொள்வோரே

குன்றா இறைநேசர்கள் !

 

 

 

அற்புதம் மட்டுமே

இறைநேசர்தம்

அடையாள மன்று !

 

 

 

தவிர்க்க முடியாமல் ஏந்தும்

தற்காப்பு ஆயுதம் போல் –

விருப்பமின்மைக் கிடையே

வெளிப்படுபவைதாம்

இறைநேசர்தம்

அற்புதங்கள் !

 

 

 

இறைநேசர்கள் –

அடியாருள் அடியாராய்த்

தம்மை

அடிக்கல்லாக்கிக்

கொண்டதனால் தான்

படிக் கல்லாய்ப்

பாராட்டப்படுகின்றனர் !

 

 

நன்றி : பச்சை ரோஜா – நவம்பர் 2012

 

News

Read Previous

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்

Read Next

முதுகுள‌த்தூர் திட‌ல் முஹ‌ம்ம‌து எஹ்யா வ‌ஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *