இப்போதும் எண்ணுகின்றேன் !
இப்போதும் எண்ணுகின்றேன் !
எம்.ஜெயராமசர்மா
மெல்பேண் .. அவுஸ்திரேலியா
தப்பேதும் வாராமல்
எப்போதும் காப்பாற்றி
முப்பொழுதும் எமைக்காக்கும்
அப்பாவை அடிதொழுவோம் !
பிடிவாதம் பிடித்தாலும்
பிழைகள்பல செய்தாலும்
கடிவாளம் போடாமல்
கனிவாகக் கடிந்திடுவார்
துணிவாக நடவென்பார்
தூய்மையாய் இருவென்பார்
பணிவாக இருப்பதுவே
பண்பென்பார் அப்பாவும் !
நான்வளர வேண்டுமென்று
தானினைப்பார் எபொழுதும்
தான்வளர நினையாமல்
தானீய்வார் அத்தனையும்
தேன்வண்டாய் பலதேடி
தினம்தருவார் அப்பாவும்
நான்நினைக்கா விட்டாலும்
அவர்நினைப்பே நானாவேன் !
படுக்கையிலே இருக்கையிலே
பக்கத்தில் வந்தமர்ந்து
தலைதடவி முகம்தடவி
தனைமறந்து அவரிருப்பார்
நானுறங்கி விட்டாலும்
என்னருகில் அவரிருப்பார்
எனையணைக்கும் அவரன்பை
இப்போதும் எண்ணுகின்றேன்!
அம்மாவை இழந்தாலும்
அனைத்துமே அப்பாதான்
அம்மாவாய் அப்பாவாய்
அவரன்பில் நான்வளரந்தேன்
அவர்மார்பில் நானுறங்க
அவர்மடியில் தலைதடவ
அவ்வாழ்வை எனக்களித்த
அப்பாதான் என்தெய்வம் !
அப்பாவை நினைக்கின்றேன்
அவர்முகத்தைக் காணவில்லை
எப்போதும் இருந்தவர்தான்
எங்கேயே சென்றுவிட்டார்
தப்பேதும் செய்யவில்லை
தவறாகச் சொல்லவில்லை
அப்பாவோ சென்றுவிட்டார்
அழுதழுது தேடுகிறேன் !
Tags: இப்போதும் எண்ணுகின்றேன்