ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் .
அறிவுக்கண் திறப்பவர் ஆசிரியர்
ஆற்றலை வளர்ப்பவர் ஆசிரியர்.
இவ்வுலகில் நாம் சிறந்திடவே
ஈடில்லாதுழைப்பவர் ஆசிரியர்.
உலக விஷயங்கள் அனைத்தையும்
ஊக்கமுடன் தெரியவைப்பவர் ஆசிரியர்
எழுத்தறிவித்தல் மட்டுமின்றி
ஏனைய கலைகள் அத்தனையும்
ஐயமற உரைப்பவர் ஆசிரியர் .
ஒழுக்கத்தின் மேன்மைதனையுரைத்து
ஓங்குபுகழ் பெறவைப்பவர் ஆசிரியர்
அறியாமை எனும் நோய் தீர்க்கும்
ஒளடதமானவர் ஆசிரியர்
எழுதப்படிக்க மட்டுமின்றி
மொழியியல், அறிவியல், கணிதவியல்
புவியியல், சரித்திரம் , பொறியியலும்
பல்கலைகளும், விளையாட்டும் ,
பாங்காய் கற்றுத்தந்திடுவார் . -அவர்
பாதம் பணிந்து வணங்கிடுவோம் .
ஏணியாய் ஏற்றி விட்டிடுவார்
தோணியாய்க் கரை சேர்த்திடுவார்
உளி போல் நம்மை செதுக்கிடுவார்
வழிகாட்டியாக விளங்கிடுவார்
அஞ்ஞானத்தை அகற்றிடுவார்
மெய்ஞானத்தை வளர்த்திடுவார்
எஞ்ஞான்றும் அவரை மறவாது
இஞ்ஞாலம் உள்ளவரை வாழ்த்திடுவோம்.
அன்பு மாணவன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
05.09.2020