அகன்றாரே !…………அப்துல் கலாம் !
அகன்றாரே !…………அப்துல் கலாம் !
கந்தையா—
அணுகுண்டு ஆய்வாளர் அறிவியலறிஞர் மக்கள்மனதில்
அணுகுண்டை ஏவிவிட்டார் அவர்மூச்சு அடங்கியதன்மூலம்
கணுவில்லா மரமாயிருந்த கன்னிமகன் சாய்ந்துவிட்டார்
அணுப்போதும் நம்நெஞ்சில் அகலாதிருக்கும் மனிதரானார் !
ஏழையும் ஓர்நாள் ஏற்றம் காண்பானென
கோழையாக ஆகாமல் கொண்ட இலட்சியத்தில்
கூழையாகப் போகாமல் ” கொள்ளுங்கள் கனவுகளை ” என
தாழையின் மணம்பரப்பிய தங்கமகன் கலாம் !
நாட்டின் முதற்குடிமகனாய் நற்பதவியில் இருந்தும்ஒவ்வொரு
வீட்டின் குடிமகனாய் விளங்குவேன் எனவிளங்கி
பாட்டின் முதற்ச்சீராய் ஏட்டின் எழுத்தாணியாய்
கூட்டின் விளக்காய் கூடாதுமாணவர்களே குன்றத்தின்
விளக்காக வேண்டுமென வளரும் தலைமுறைக்கு
துலக்க ஒளியைத் தூண்டிய பெருமகன்
கலக்கமிலா நெஞ்சத்துடன் கலவரம் நடைபெற்ற
குசராத் மாநிலத்திற்கு அச(ய)ராது சென்றமகன் !
வாழ்க்கைப் பயணத்தின் வழிச் சுவடுகளை
தாழ்க்கைச் சமுதாயம் தலைநிமிர்ந்து நடைபோட
” தீக்கனல்சிறகு ” நூல்தீட்டி திக்கெலாம் அறியச்செய்த
மிக்குணம்கொண்ட பெருமகனை எக்குலமும் ஏற்பரே !
கிழவன் வள்ளுவன் உழுதெழுதிய தமிழில்இந்த
உழவன் ஒருநூறுகுறள் உவப்புடன் தெரிந்தெடுத்து
பழுதிலா உரை பகன்றாரே இன்றோமக்கள்
அழுதுபுலம்ப அகன்றாரே ! அப்துல்கலாம் மண்ணைவிட்டு!
Tags: அகன்றாரே அப்துல் கலாம்