பேராபத்தின் துவக்கம்
பேராபத்தின் துவக்கம்
இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்று அதன் தலைவர் சிவன் கூறுகிறார். ஆனால் மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கைகள் விண்வெளித் துறையையும் விட்டுவைக்கவில்லை. ராக்கெட் வடிவமைக்கவும் செலுத்தவும் அதுகுறித்த ஆராய்ச்சிகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தனியார் ஏவுதளங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைய உள்ளது. இவை அனைத்தும் இஸ்ரோவை படிப்படியாக தனியாரிடம் தள்ளிவிடும் நடவடிக்கைகளே.
நாட்டிலுள்ள மிக முக்கியமான துறைகளில் விண்வெளி தொழில் நுட்பத்துறையும் ஒன்று. இந்த துறை கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந் துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். கடந்த 20 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
90களில் அதிகபட்சமாக 804 கிலோ எடை கொண்ட தொலை உணர்வு செயற்கைக் கோள்களைத்தான் நமது ராக்கெட்டுகள் விண்ணில் ஏவும் திறனைப் பெற்றிருந்தன. விஞ்ஞானிகளின் அயராத உழைப்பாலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் தற்போது 2250 கிலோவுக்கும் அதிகமான செயற்கைக்கோள்களை நமது ராக் கெட்டுகள் விண்ணுக்கு ஏந்திச்சென்று அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்துகின்றன. இந்த வரிசையில் இஸ்ரோ இதுவரை 45க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.
இதில் நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆராயும் மங்கள்யான் ஆகியவையும் பல சிறிய ரக செயற்கைக் கோள்களும் அடங்கும். வர்த்தக ரீதியில் 33க்கும் மேற்பட்ட நாடுகளின் 310 செயற்கைக் கோள்களை யும் விண்ணுக்கு செலுத்தியதன் மூலம் இந்தியாவுக்கு வருவாயும் கிடைத்துள்ளது. நமது விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பாலும் அரசாங்கத்தின் நிதியுதவியாலும் பொதுத்துறை நிறுவனமான இஸ்ரோ இன்று உலகில் மிகவும் நம்பிக்கையான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது.
நமது நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்திற்கு சோவியத் யூனியன் அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கது. பல முன்னேறிய நாடுகள் விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முன்வராதபோது நட்பு நாடான சோவியத் யூனியன் தாராளமாக உதவி செய்தது. கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை அமெரிக்க தர மறுத்தபோது ரஷ்யா தந்து உதவியது. இதனால் குறைந்த செலவில் அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்களை இந்தியாவால் விண்ணிற்கு அனுப்பமுடிகிறது.
தனியார் நிறுவனங்கள் இந்த துறையில் ஈடுபடும்போது அவை லாபத்திலேயே குறியாக இருக்கும். மக்களின் முன்னேற்றத்திற்கான அறிவியல் என்ற நிலை மாறி தனியாரின் லாபவேட்டைக்கு அறிவியல் என்ற நிலையாகிவிடும். மேலும் விண்வெளி தொழில் நுட்பமும் ஏவுகணை தொழில்நுட்பமும் கிட்டத் தட்ட ஒன்றுதான். இத்துறையில் தனியார் ஈடுபடும்போது ரகசியங்கள் கசியலாம். பணத்திற்காக தொழில் நுட்பங்கள் விற்கப்படலாம். எனவே விண்வெளித் துறையில் தனியார்மயம் என்பது இஸ்ரோவுக்கு மட்டுமல்ல நாட்டிற்குமே ஆபத்தானது.
(நன்றி .. 22-08-2020 தீக்கதிர் தலையங்கம்)